ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் ஹீரோவாக மாறி இருக்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி. அவர் கே எல் ராகுலை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என முடிவு செய்து அதற்கு ஏற்ப ஒரு திட்டத்தை செயல்படுத்தி அனைவரையும் வாயை பிளக்க வைத்தார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் இரண்டு சுற்றுகளில் நட்சத்திர வீரர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. அவர்களில் முக்கியமான மூன்று பெயர்கள் - ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல். இவர்களில் ஸ்ரேயாஸ் பெயரும், ரிஷப் பெயரும் முன்னதாக இடம் பெற்று இருந்தன. கே எல் ராகுல் பெயர் அவர்களுக்கு அடுத்ததாக இருந்தது.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் பெயர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவர்களை வாங்க ஏலம் கேட்டது. அதனால் அவர்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்க முயன்ற நிலையில் டெல்லி போட்டி போட்டது. அதனால், 26.75 கோடி ரூபாய்க்கு தான் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை வாங்கியது.
அதே போல ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். இதன் பின்னணியிலும் கிரண் குமார் கிராந்தி இருந்தார். இந்த ஏலத்துக்கு முன் ரிஷப் பண்ட்டை விடுவித்து இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அதனால், அந்த அணி அவருக்கு ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது.
அவருக்கான ஏலம் 20.75 கோடியுடன் நிறைவு பெற்ற போது ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தியது டெல்லி கேப்பிடல்ஸ். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பண்ட்டை வாங்க 20.75 கோடி வரை ஏலம் கேட்டு இருந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தியதால் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிரடியாக 27 கோடி ரூபாய் என விலையை உயர்த்தினார்.
உடனடியாக டெல்லி கேப்பிடல்ஸ் ரிஷப் பண்ட்டை வாங்குவதில் இருந்து பின் வாங்கியது. இந்த ஏலத்துக்கு முன்னதாக ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணி உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என கூறப்பட்ட நிலையில், பண்ட்டை அந்த அணி ஏலத்தில் வாங்க முயற்சித்தது ஒரு வியாபார உத்தி மட்டுமே என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஏலம் துவங்கிய போது அதிக தொகை கையிருப்பில் வைத்திருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிக தொகையை செலவிட்டு இருந்ததால் கே எல் ராகுல் பெயர் அறிவிக்கப்பட்ட போது அந்த அணிகள் அவரை வாங்க முயற்சி செய்யவில்லை.
அதை பயன்படுத்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி கே எல் ராகுலை 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதை அடுத்து கிரண் குமார் கிராந்தியை பலரும் அவரது வியாபார உத்திக்காக பாராட்டி வருகின்றனர்.