ஜெட்டா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் வெங்கடேஷ் ஐயரை சுமார் 23.75 கோடி கொடுத்து வாங்கியது.
தங்கள் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கக்கூட அந்த அணி இவ்வளவு தொகையை செலவிட விரும்பவில்லை. ஆனால், வெங்கடேஷ் ஐயரை வாங்க மிகப்பெரிய தொகையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அளித்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும், வெங்கடேஷ் ஐயரை தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்கும் முடிவில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை குறிவைத்து பெரிய தொகைக்கு வாங்கி உள்ளது என விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர்.
அந்த பதிப்பில் கொல்கத்தா அணி கோப்பையையும் வென்றது. தங்கள் அணிக்கு ஐபிஎல் கோப்பை பெற்றுத் தந்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏலத்திற்கு முன்பு அவரை அந்த அணி விடுவித்தது. ஸ்ரேயாஸ் ஐயரை கூடுதல் சம்பளம் கேட்டதால் அவரை விடுவித்ததாக அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறுபுறம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிஷப் பண்ட்டை வாங்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் வாங்குவதில் குறியாக இருந்தது.
அவருக்கான விலை 20 கோடியை தாண்டிய போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்குவதில் உறுதியாக இருந்தது. முடிவாக 23.75 கோடிக்கு அவரை வாங்கியது. கடந்த இரண்டு சீசன்களாக வெங்கடேஷ் ஐயர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் பேட்டிங்கில் அதிரடி ஆட்டம் ஆடுவதோடு பந்து வீச்சிலும் பகுதி நேரமாக கை கொடுப்பார் என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கி இருக்கிறது.
ஆனால் இத்தனை பெரிய தொகை அளித்ததற்கு காரணம் அவரை கேப்டனாக நியமிக்க உள்ளது தான் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். வெங்கடேஷ் ஐயரை கேப்டனாக நியமிக்கும் முடிவு ஏலத்தின் போது தான் எடுக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில், வெங்கடேஷை கேப்டனாக நியமிக்க முடிவு செய்து இருந்தால் அவரை விடுவித்து இருக்கும் முடிவை கொல்கத்தா அணி எடுத்து இருக்காது.
ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை ஏலத்தில் வாங்கி கேப்டனாக நியமிக்கலாம் என்ற கொள்கையைதான் நிர்வாகம் நினைத்து இருக்கக் கூடும். ஆனால், அவர்கள் அதிக தொகைக்கு மற்ற அணிகளால் வாங்கப்பட்டதால் வெங்கடேஷ் ஐயரை கேப்டன் தேர்வாக வாங்க கொல்கத்தா நிர்வாகம் முடிவு செய்து இருக்கும் என கூறப்படுகிறது.