சென்னை: 2026 ஐபிஎல் மினி ஏலம் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி எந்த வீரரை எடுக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார். ரவி பிஷ்னாய், டேவிட் மில்லர் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை சிஎஸ்கே வாங்கக் கூடாது என்றும், நியூசிலாந்து அணியின் 34 வயது ஆல்-ரவுண்டர் ஒருவரை சிஎஸ்கே குறிவைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் சென்றுவிட்டதால், அந்த இடத்தை நிரப்பச் சரியான வீரரைத் தேடி வருகிறது. இந்தச் சூழலில் ஸ்ரீகாந்த் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "சிஎஸ்கே அணியில் ருதுராஜ், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மத்ரே என டாப் ஆர்டர் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. அதனால் பேட்டிங் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நான் மட்டும் சிஎஸ்கே நிர்வாகத்தில் இருந்தால், மைக்கேல் பிரேஸ்வெல் போன்ற ஒரு வீரரைத்தான் எடுப்பேன்.
எல்லோரும் அவரை மிகவும் குறைவாக மதிப்பிடுகிறார்கள். ஹைதராபாத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் அடித்த அந்த மிரட்டலான சதத்தை யாராலும் மறக்க முடியாது. அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன், பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்கும் திறன் கொண்டவர். அதேசமயம் ஆஃப்-ஸ்பின்னும் வீசுவார். ஒரு சிறந்த பினிஷராக இருப்பார்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "எல்லோரும் லிவிங்ஸ்டோன் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பிரேஸ்வெல்லுக்கு ஊக்கம் கொடுத்தால் அவர் நிச்சயம் ஜொலிப்பார். தோனி போன்ற ஒருவர் அணியில் இருக்கும்போது, பிரேஸ்வெல்லை ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக மாற்றிக்காட்ட முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரேஸ்வெல் 2023 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணி ரவி பிஷ்னாய் மற்றும் டேவிட் மில்லரை எடுக்கக்கூடாது என்றும் ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார். "ரவி பிஷ்னாயை நான் நிச்சயம் எடுக்க மாட்டேன். ஏற்கனவே ஸ்ரேயாஸ் கோபால் இருக்கிறார். அதேபோல டேவிட் மில்லர் ரன் அடித்து பல காலம் ஆகிறது. சேப்பாக்கம் பிட்ச் அவருக்குச் செட் ஆகாது. மில்லருக்குப் பதில் பந்துவீசத் தெரிந்த பிரேஸ்வெல் எவ்வளவோ மேல்" என்று ஓபனாகப் பேசினார்.
மேலும், "10 கோடி ரூபாய்க்குள் லியம் லிவிங்ஸ்டோன் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகிய இருவரையுமே சிஎஸ்கேவால் வாங்க முடியும். இது சிவம் துபேவுக்குக் கீழே உள்ள இடத்தை நிரப்பும். ஜடேஜா விட்டுச்சென்ற இடத்தை இவர்களால் இட்டுக்கட்ட முடியும். மேலும் ஆஸ்திரேலிய இளம் வீரர் கூப்பர் கானலியையும் 2-3 கோடிக்கு வாங்கலாம்" என்று ஸ்ரீகாந்த் தனது வியூகத்தைப் பகிர்ந்துள்ளார்.