மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சுமார் 72 வீரர்கள், 10 அணிகளால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 24 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார்கள். மொத்தமாக நான்கு ஆர் டி எம் கார்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
467 கோடியே 95 லட்சம் ரூபாய் முதல் நாள் ஏலத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல் நாள் ஏலத்தில் பல முக்கிய வீரர்களை எந்த அணியும் வாங்காமல் போனது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இதில் எந்த வீரர் யார் என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக இந்தியாவைச் சேர்ந்த டேவிட் படிக்கல் ஏலம் போகவில்லை. இவர் தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயை நிர்ணயித்திருந்தார். இந்த பட்டியலில் இரண்டாவது வீரராக ஏலம் போகாமல் இருந்தது ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர். தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை வைத்திருந்தார்.
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அவரை எந்த அணியும் ஏலத்தில் தேர்வு செய்யவில்லை. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பாரிஸ்டோ. இவரும் தன்னுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக வைத்திருந்தார்.
அதேபோன்று சுழற் பந்துவீச்சாளரான ஆப்கானிஸ்தான் சேர்ந்த வக்கர் சலாம்கேள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பியூஸ் சாவ்லா,கார்த்திக் தியாகி போன்ற வீரர்கள் ஏலம் போகாமல் இருந்தார்கள். அதேபோன்று அண்டர் 19 உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர் யாஷ் தூல், அன்மோல்பிரித் சிங், உட்கார் சிங், லவ்னித் சிசோடியா, உபேந்தர் சிங் யாதவ், ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட 12 வீரர்கள் இந்த ஏலத்தில் விலை போகவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஏலத்தின் இறுதியில் ஏலம் போகாத வீரர்களை ஏதேனும் அணி வாங்க விரும்பினால், அவர்களை மீண்டும் ஏலத்துக்கு கொண்டு வர முடியும். அப்போது தங்களுக்கு தேவையான வீரர்களை கடைசி கட்டத்தில் ஐபிஎல் அணிகள் வாங்கிக் கொள்ளும். இதனால் டேவிட் வார்னர்,பாரிஸ்டோ போன்ற வீரர்கள் இரண்டாவது நாள் இறுதியில் ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.