ஜெட்டா: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தின் முதல் செட்டில் ரிஷப் பண்ட்டை ரூ.27 கோடி லக்னோ அணியும், ரூ.26.75 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணியும், ரூ.18 கோடிக்கு அர்ஷ்தீப் சிங்கை ஆர்டிஎம் மூலம் பஞ்சாப் அணியும் கைப்பற்றியது. முதல் செட்டில் சிஎஸ்கே அணி அர்ஷ்தீப் சிங்கை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு அமைதி காத்தது.

இதன்பின் சிறிய இடைவேளைக்கு பின் 2வது கட்ட வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பெயர் அறிவிக்கப்பட்டது. உடனடியாக சிஎஸ்கே அணி களத்தில் குதிக்க, இன்னொரு பக்கம் கேகேஆர் அணி மோதியது. இரு அணிகளும் ரூ.8 கோடி வரை விரைவாக விலையை அதிகரிக்க, பின்னர் சிஎஸ்கே அணி விலகியது.
பின்னர் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களத்தில் குதித்தது. அப்போது அவரின் விலையை ரூ.10 கோடியாக ஐதராபாத் அணி கொண்டு செல்ல, கேகேஆர் அணி ஏலத்தில் இருந்து விலகியது. இதனால் இறுதியாக முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளரை இவ்வளவு குறைந்த தொகைக்கு ஐதராபாத் அணி வாங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காயம் காரணமாக முகமது ஷமி ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் முகமது ஷமி, பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர். இருந்தாலும் அவர் தொடர்ந்து காயமடையக் கூடியவர் என்பதால், பல்வேறு அணிகளும் எளிதாக விட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.