மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இஷான் கிஷன் விடுவிக்கப்பட்டு இருப்பதன் பின்னணியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருக்கலாம் என சமூக வலைதளங்களில் மும்பை அணியின் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
2025 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட பின்னர் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு செல்வது பற்றி வெளியிட்ட ஒரு பதிவும், ஹர்திக் பாண்டியா அதற்கு அளித்த பதிலும்தான் இந்த விவகாரம் விவாதப் பொருளாக இருப்பதற்கு முக்கிய காரணம்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை அணியில் இருந்து விடுவித்து இருந்தது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரை அந்த அணி தக்க வைத்தது. இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஏலத்தில் 3.20 கோடி ரூபாய் வரை மட்டுமே அவருக்காக ஏலம் கேட்ட மும்பை இந்தியன்ஸ் அணி. பின்னர் பின் வாங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனை 11.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் ஆறு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த நிலையில் அந்த அணியை விட்டு வேறு அணிக்கு செல்வது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தனக்கு கிடைத்த உதவிகள் மற்றும் சிறந்த அனுபவங்களை பற்றி அவர் பேசி இருந்தார். அதற்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதில் அளித்து இஷான் கிஷனை ஏன் ஏலத்தில் வாங்க முடியவில்லை? என விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் மூவரும் இஷான் கிஷன் பதிவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் இது போன்ற பதிவுகளுக்கு எப்போதும் "லைக்" செய்வார் அல்லது தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த வீரரை வாழ்த்தி பதிவிடுவார். ஆனால் இந்த முறை அவரும் இஷான் கிஷனின் பதிவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும், இந்திய அணியில் இருந்தும் இஷான் கிஷன் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். இதை அனைத்தையும் முடிச்சு போட்டு இருக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் நண்பராக இஷான் கிஷன் இருந்ததுதான் அவரை அணியில் இருந்து விடுவிக்க முக்கிய காரணம் என சுட்டிக்காட்டி உள்ளனர்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் எழுந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா சார்பில் சில வீரர்களும், ரோஹித் சர்மா தலைமையில் சில வீரர்களும் இரண்டு பிரிவாக செயல்படுவதாக சர்ச்சை எழுந்தது. அப்போது இஷான் கிஷன் தான் ஹர்திக் பாண்டியா பக்கம் இருந்த முக்கியமான வீரர். அப்போது இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என தற்போது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.