மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றனர். இதில் பத்து அணிகளும் இணைந்து 182 வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இதில் 62 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சூழலில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பனிரெண்டு வங்கதேச வீரர்களும் தங்களது பெயரை பதிவு செய்திருந்தார்கள். ஆனால் இதில் ஒருவர் கூட ஐபிஎல் அணிகளால் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் பாகிஸ்தான் வீரர்களை ஓரங்கட்டியது போல் வங்கதேச வீரர்களையும் பிசிசிஐ ஓரங்கட்டி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபில் தொடரிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஒரு முறை கூட அதன்பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்திலே பங்கேற்றது கிடையாது.
இந்த நிலையில் இந்த பட்டியலில் தற்போது வங்கதேச வீரர்களும் இணைந்து இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்காமல் கைவிட்டது. இதேபோன்று வங்கதேச அணியில் உள்ள சகிபுல் ஹசன், மெகதி ஹசன், டஸ்கின் அஹமத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், லிட்டன் தாஸ், நஹி ராணா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சொல்லி வைத்தது போல் பத்து அணிகளுமே வங்கதேச வீரர்களை தேர்வு செய்யவில்லை. இதற்கு காரணம் அண்மையில் வங்கதேச நாட்டில் நடைபெற்ற கலவரம் தான் என்று கூறப்படுகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதில் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டதாக இங்கு செய்திகள் பரப்பப்பட்டது.
எனினும் அதில் உண்மை இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் இந்தியாவில் சில அமைப்புகள் அதை வைத்து பிரச்சினைகளை கிளப்பி வந்தன. குறிப்பாக வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது கூட வட இந்தியாவில் வங்கதேச அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் மீண்டும் பிரச்சனை எழ வாய்ப்பு இருக்கலாம் என்று நினைத்து பத்து அணிகளும் வங்கதேச வீரர்களை எடுக்காமல் விட்டுவிட்டது என தெரிகிறது.
ஏற்கனவே இலங்கையில் திறமை வாய்ந்த வீரர்கள் முன்பு போல் கிடைப்பதில்லை மறுபுறம் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படுவதில்லை . தற்போது வங்கதேசமும் ஓரங்கட்டப்பட்டால் 10 அணிகளுக்கும் போதிய வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.