மும்பை: இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆக வருவார் எனவும், அடுத்த சச்சின் எனவும் கூறப்பட்ட ப்ரித்வி ஷா கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெற முடியாமல் திணறி வந்தார். 2025 ஐபிஎல் ஏலத்துக்கு பின் இன்னும் மோசமான நிலைக்கு சென்று இருக்கிறார் பிரித்வி ஷா.
ஐபிஎல் அணிகளாலும் இப்போது புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இது பற்றி இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளருமான பிரவீன் ஆம்ரே பேசி இருக்கிறார்.

பிரித்வி ஷா கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வந்தார். அந்த அணியும் அவரை 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை. பிரித்வி ஷா இளம் வயதிலேயே பல கோடிகளை சம்பாதித்தது தான் இதற்கு காரணம் என பிரவீன் ஆம்ரே சுட்டிக்காட்டி இருக்கிறார்.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் வினோத் காம்ப்ளியின் உதாரணத்தை பிரித்வி ஷாவிடம் சொன்னேன். வினோத் காம்ப்ளியின் வீழ்ச்சியை நான் மிக அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். இந்த தலைமுறை வீரர்களுக்கு சில விஷயங்களை எளிதில் சொல்லி புரிய வைக்க முடியாது."
"டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும். பிரித்வி ஷா 23 வயதுக்குள் 30 முதல் 40 கோடிகள் வரை சம்பாதித்து இருப்பார். இன்று ஒரு ஐஐஎம் பட்டதாரி இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியுமா? முடியாது. அந்த வகையில் மிக இளம் வயதில் அதிக பணத்தை சேர்த்ததால் குறிக்கோளை இழந்து விட வாய்ப்பு உள்ளது. பணத்தை எப்படி நிர்வகிப்பது, நல்ல நண்பர்களை எப்படி வைத்துக் கொள்வது?, கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது எப்படி? போன்றவற்றில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்."
"ஆனால், ஒழுக்கமின்மை பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்வை கீழே தள்ளி இருக்கிறது. மீண்டும் வந்து சிறப்பாக ஆட வேண்டும் என்ற பசி இருக்க வேண்டும். அதுவும் அவரிடம் இல்லை. இப்படி ஒரு திறமையாளர் பின்னோக்கி செல்வதை பார்ப்பதற்கு ஏமாற்றமாக உள்ளது. மும்பை அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரில் பிரித்வி ஷா ஆட செல்லும் முன் பயிற்சிப் போட்டியில் அபாரமாக சதம் அடித்தார் என்றார்கள்."
"அவர் இன்றும் கூட ஐபிஎல் தொடரில் விளையாடினால் 30 பந்தில் 50 ரன்கள் எடுப்பார். ஆனால், தனக்கு கிடைத்த ஐபிஎல் பிரபலம் மற்றும் பணம் ஆகியவற்றை அவரால் சரியாக கையாள முடியவில்லை. இது ஐபிஎல் தொடரின் பக்க விளைவுகள் ஆகும். இந்திய கிரிக்கெட் பிரித்வி ஷாவை ஒரு முன்னுதாரணமாக வைக்க வேண்டும். இவருக்கு நடந்தது வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் நடக்கக்கூடாது. வெறும் திறமை மட்டுமே உங்களை உச்சத்தில் வைத்து இருக்காது. ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்." என்றார் பிரவீன் ஆம்ரே.
சச்சின் டெண்டுல்கரின் நண்பர் வினோத் காம்ப்ளி ஒரு காலத்தில் சச்சின், சுனில் கவாஸ்கருக்கு இணையாக வருவார் என பேசப்பட்டவர் தான். ஆனால், 23 வயதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடி இருந்தார். அதன் பின் ஒழுங்கீனம் காரணமாக இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டார். அதே போன்ற நிலை பிரித்வி ஷாவுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.