ஜெட்டா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் இன்று தொடங்கியது. 577 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் முதல் சுற்றில் ஸ்டார் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் முதல் வீரராக ஆர்ஸ்தீப் சிங் ஏலத்திற்கு வந்தார். ஆர்ஸ்தீப் வந்த உடனையே சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. சிஎஸ்கே அணி அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு முதலில் கேட்டது. அதன் பிறகு டெல்லி அணி இந்த போட்டியில் சிஎஸ்கேயுடன் பங்கேற்றது.

இதனை தொடர்ந்து சிஎஸ்கேவும் டெல்லி அணியும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 7 கோடியே 25 லட்சம் வரை ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வழங்க முன் வந்தது. ஆனால் டெல்லி அணி அதற்கும் கூடுதலாக கேட்டதால் சிஎஸ்கே அணி போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதை எடுத்து டெல்லி அணியும், ஆர் சி பி அணியும் போட்டி போட்டுக் கொள்ள டெல்லி அணி 9 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை கொடுக்க முன்வந்து பின் போட்டியில் இருந்து விலகியது.
இதை அடுத்து ஆர்ஸ்தீப் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ராஜஸ்தான் ராயல்சும், குஜராத் அணியும்,சன்ரைசர்ஸ் அணியும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதை அடுத்து 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஆர்ஸ்தீப் சிங்கை எடுக்க சன்ரைசர்ஸ் அணி முன் வந்தது. அப்போது ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி பஞ்சாப் அணி அதைத்தொகைக்கு ஆர்ஸ்தீப் சிங்கை வாங்கபோகிறோம் என அறிவித்தது.
இதனை அடுத்து புதிய விதிப்படி மீண்டும் சன்ரைசர்ஸ் அணியிடம் நீங்கள் எவ்வளவு தொகை கொடுக்க முன் வருகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு காவியா மாறன் நான் 18 கோடி ரூபாய் வழங்குகிறேன் என்று அறிவித்தார். இதை அடுத்து மீண்டும் அதே ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி நாங்களும் 18 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறி ஆர்ஸ்தீப் சிங்கை பஞ்சாப் அணியை மீண்டும் வாங்கி இருக்கிறது.
இதன் மூலம் காவியா மாறன் எடுத்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆர்ஸ்தீப்பை சிஎஸ்கே அணி முதலில் ஏலத்தில் கேட்டதால் நமது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் 7 கோடி ரூபாய்க்கு மேல் வழங்க சிஎஸ்கே முன்வராமல் வெளியேறிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இரண்டாவது வீரராக வந்த தென்னாப்பிரிக்காவின் ரபடாவை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.