ஜெட்டா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகிய இரண்டு சர்வதேச அனுபவம் மிக்க வீரர்களை வாங்க ஆர் டி எம் அட்டையை பயன்படுத்தவில்லை. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்தது. விராட் கோலி, யாஷ் தயாள், ரஜத் படிதார் ஆகிய மூவரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ் போன்ற சர்வதேச அனுபவம் மிக்க வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது.

அவர்களில் சிலரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று ஆர் டி எம் அட்டைகளை பயன்படுத்தி மீண்டும் வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்கள் இருவரின் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டபோது ஆர்சிபி அணி அவர்களை வாங்க முயற்சிக்கவில்லை.
அது மட்டும் இன்றி அவர்களை மற்ற அணிகள் வாங்கிய போது ஆர் டி எம் அட்டையை பயன்படுத்தவும் இல்லை. மேக்ஸ்வெல் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 4.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இது மிகவும் குறைவான தொகை என்ற போதும் பெங்களூரு அணி ஆர் டி எம் அட்டையை பயன்படுத்தி மேக்ஸ்வெல்லை வாங்க முயற்சிக்கவில்லை.
அதேபோல முகமது சிராஜுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 12 கோடி வரை ஏலம் கேட்டு இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் கையிருப்பில் வெறும் 41 கோடி ரூபாய் மட்டுமே இருந்த நிலையிலும் முகமது சிராஜின் முக்கியத்துவத்தை உணர்ந்து 12 கோடி வரை ஏலம் கேட்டு இருந்தது.
ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு சிராஜை வாங்கியது. பெங்களூரு அணியிடம் 83 கோடி கையிருப்பில் இருந்தும் முகமது சிராஜை ஆர் டி எம் அட்டையை பயன்படுத்தி வாங்க முயற்சிக்கவில்லை. இந்த விவகாரம் ஆர்சிபி அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.