ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவே மிக அதிகபட்ச தொகை ஆகும். அவரை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் முட்டி மோதின.

ரிஷப் பண்ட் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது முதலே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அவரை வாங்குவதில் குறியாக இருந்து விலையை உயர்த்திக் கொண்டே சென்றார். அவருடன் முதலில் போட்டி போட்ட ஆர்சிபி அணி 11 கோடியுடன் விலை கேட்பதை நிறுத்திக் கொண்டது.
அதன் பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களத்தில் குதித்தது. அந்த அணி 45 கோடி மட்டுமே கையிருப்பில் வைத்து இருந்த போதும் 20.50 கோடி வரை ஏலம் கேட்டது. லக்னோ அணி 20.75 கோடி என விலையை உயர்த்தியதை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விலகியது.
பின்னர் ரிஷப் பண்ட்டின் முந்தைய அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தியது. அப்போது லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிரடியாக 27 கோடி ரூபாய் என விலையை கூறினார். டெல்லி கேப்பிடல்ஸ் பண்ட்டை வாங்க விருப்பம் இல்லை என அறிவித்தது.
இதன் மூலம், ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதே ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்த நிலையில், அதை முந்திய ரிஷப் பண்ட் 27 கோடி என்ற விலையை எட்டி இருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ரிஷப் பண்ட்டை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. முன்னதாக அந்த அணி கேப்டனாக இருந்த கே எல் ராகுலை அணியில் இருந்து நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.