ஜெட்டா: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் லக்னோ அணி தரப்பில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கும், டேவிட் மில்லர் ரூ.7.5 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக லக்னோ அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் பூரன், ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய மூவரும் இணைந்து விளையாட உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது லக்னோ அணி. ரிஷப் பண்ட் தொகை ரூ.22 கோடிக்கு அருகில் வந்த போது, வேறு எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை. அப்போது டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் ஆர்டிஎம் கார்டு உயர்த்தப்பட்டது. இதனால் லக்னோ அணி தரப்பில் உடனடியாக ரிஷப் பண்ட் ஏலத் தொகை உயர்த்தப்பட்டது.

ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் விலையை உயர்த்துகிறோம் என்று லக்னோ அணி நிர்வாகம் அறிவித்த நிலையில், டெல்லி அணி உரிமையாளர்கள் பின் வாங்கினர். இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதன் காரணமாக இனி லக்னோ அணியின் ஜெர்சியில் விளையாட உள்ளார்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணி தரப்பில் ரூ.7.5 கோடிக்கு டேவிட் மில்லர் வாங்கப்பட்டார். அந்த அணியால் ஏற்கனவே அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் ரூ.21 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டார். இதன் மூலமாக நம்பர் 3, 4, 5 ஆகிய பேட்டிங் வரிசையில் நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் விளையாட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆயுஷ் பதோனியும் இருக்கிறார். லக்னோ போன்ற பவுலிங்கிற்கு சாதகமான பிட்சில் அதிரடி பேட்ஸ்மேன்களை வாங்குவது அந்த அணிக்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் எதிரணி தரப்பில் 2 ஆஃப் ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் முழுமையாக சிக்கலை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இம்முறை சஞ்சீவ் கொயங்கா ஆலோசகராக கொண்டு வரப்பட்டுள்ள ஜாகீர் கானின் பேச்சை நம்பி இருக்கிறார். இருந்தாலும் ஜாகீர் கானின் இந்த திட்டங்கள் களத்தில் சரியாக செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.