டெல்லி: ரிஷப் பண்ட் பணத்துக்காக தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு விலகினார் என அந்த அணியின் புதிய பயிற்சியாளர் ஹேமங் பதானி பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவித்து இருந்தது.
அப்போது ரிஷப் பண்ட் அவராகவே அந்த அணியின் இருந்து வெளியே வர விரும்பியதாக அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜின்டால் குறிப்பிட்டு இருந்தார். ஏலத்தில் ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

ரிஷப் பண்ட் வெளியே வந்தது பற்றி சமீபத்தில் பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் ஹேமங் பதானி சில நம்ப முடியாத குற்றச்சாட்டை முன்வைத்தார். "ரிஷப் பண்ட் தன்னை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்க வைப்பதை விரும்பவில்லை. அவர் ஏலத்தில் பங்கேற்று சந்தையில் தனக்கான மதிப்பு என்ன? என்பதை சோதனை செய்ய விரும்பினார்." என்றார் பதானி.
மேலும், "ஒரு வீரரை தக்க வைக்க வேண்டும் என்றால் அந்த அணியும், வீரரும் சில விஷயங்களை ஒப்புக் கொள்ள வேண்டும். நாங்கள் அவருடன் பேச முயன்றோம். அணி நிர்வாகமும் அவருடன் பேசியது. நிறைய போன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் பரிமாறப்பட்டன. ஆனால், அவர் தனக்கான அதிகபட்ச விலையான 18 கோடியை விட, ஏலத்தில் அதிக சம்பளம் கிடைக்கும் என நினைத்தார். சந்தையும் அதைத்தான் சொன்னது. அவருக்கு 27 கோடி கிடைத்தது." என்றார் ஹேமங் பதானி.
ஹேமங் பதானியின் இந்த விளக்கம் ஐபிஎல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக சுனில் கவாஸ்கர் இதே போன்ற ஒரு கருத்தை கூறிய போது அதற்கு ரிஷப் பண்ட் விளக்கம் அளித்து இருந்தார். அதில் நிச்சயமாக பணத்திற்காக தான் வெளியே வரவில்லை என தெளிவுபடுத்தி இருந்தார்.
அடுத்து ஏலம் முடிந்த பின் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜின்டால், ரிஷப் பண்ட் விலகியது பற்றி பேசியபோது, அணியின் உரிமையாளர்களாகிய தாங்கள் அவரது செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் அணியில் இருந்து விலக முடிவு எடுத்ததாகவும் கூறி இருந்தார்.
இவ்வாறாக ரிஷப் பண்ட் பணத்துக்காக வெளியே வரவில்லை, கருத்து வேறுபாட்டால் தான் வெளியே வந்தார் என்பது இரு தரப்பிலிருந்து வெளியான தகவல்களின் மூலம் தெளிவாக தெரிகிறது. ஆனால், பயிற்சியாளர் ஹேமங் பதானி இவ்வாறு பேசி இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.