சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இரண்டாவது நாள் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சாம் கரனை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்ல பிள்ளையாக சாம் கரன் விளங்கினார். ஐபிஎல் 2020 மற்றும் 21ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாம் கரன் மொத்தமாக 23 போட்டிகளில் விளையாடினார்.

சிஎஸ்கேவில் இடம் பெற்ற காலகட்டத்தில் சாம் கரனை ரசிகர்கள் கடைக்குட்டி சிங்கம் என்று தான் அழைப்பார்கள். அணியில் இருந்த இளம் வீரர்களே அவர் திறமையானவராக கருதப்பட்டார். அது மட்டும் இல்லாமல் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டுமே சாம் கரன் கலக்கக் கூடியவர். இரண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்காக 22 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.
மொத்தமாக சிஎஸ்கே அணிக்கு 242 ரன்கள் அவர் அடித்திருக்கிறார். சாம் கரனை பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் அவரை மிகவும் மிஸ் செய்தார்கள். சாம் கரனுக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு ஒரு நல்ல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லை. தற்போது சாம் கரன் அணிக்கு திரும்பியிருப்பதால் சிஎஸ்கே அணியின் பலம் அதிகரித்து இருக்கிறது.
பந்துவீச்சில் பதிரானாவும், சாம் கரனும் இணைந்து செயல்படுவதன் மூலம் பந்துவீச்சு பலமும் அதிகரிக்கும். இதேபோன்று பேட்டிங்கில் சாம் கரன் கீழ் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடுவதன் மூலம் பேட்டிங்கும் வலுப்பெறும். இதனால் சிஎஸ்கே அணி சாம் கரனை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்பதன் மூலம் இது ஒரு சிறந்த ஒரு செயல்பாடாக பார்க்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாம் கரன் திரும்பி இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடி வருகின்றனர். எனினும் சாம் கரன் கடந்த ஏலத்தில் 18 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பாதித்த நிலையில் தற்போது அவருடைய ஊதியம் வெறும் 2 கோடியே 40 லட்சம் ரூபாயாக குறைந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.