பெர்த்: ஐபிஎல் மெகா ஏலம் நாளை நடக்கவுள்ள நிலையில், சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 57 பந்துகளில் 10 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 130 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இவரின் ஆட்டம் காரணமாக மும்பை அணி 20 ஓவர்களில் 250 ரன்களை குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியால் ரீடெய்ன் செய்யப்படவில்லை. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பார்த்த தொகையை கேகேஆர் அணி கொடுக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்பின் கேகேஆர் அணி நடத்திய மாதிரி ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.4.5 கோடிக்கு மட்டும் சென்றார்.

இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி நிர்வாகம் அவமரியாதை செய்வதாக சில விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நாளை நடக்கவுள்ள மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் டெல்லி, ஆர்சிபி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு கேப்டன்கள் தேவையாக உள்ளனர்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் குறைந்தபட்சம் ரூ.16 கோடி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயருடன் டெல்லி அணி நிர்வாகம் தொடர்பில் இருப்பதாகவும், அவரை வாங்க முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வெகு மாதங்களாகிவிட்டது.
இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியிலும் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் குறித்த சந்தேகங்கள் எழுந்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் மும்பை அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை குவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 57 பந்துகளில் 10 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 130 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்துள்ளார். ஏற்கனவே ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் விளாசி ஃபார்முக்கு வந்த அவர், இப்போது சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அசத்தி இருக்கிறார்.
இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளுக்கு பேட்டின் மூலமாகவே பதிலடியை கொடுத்துள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கும் போட்டியில் இன்னும் சில அணிகள் குதித்து அவரின் விலையை ஏற்றிவிட அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.