ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வெறும் 45 கோடி கையிருப்பை வைத்து இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சுமார் 15 கோடி, 20 கோடி வரை வீரர்களுக்கு விலை கேட்டது மற்ற அணிகளை வியப்பில் ஆழ்த்தியது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் குறைந்த கையிருப்பை வைத்துக் கொண்டு முக்கிய வீரர்களை வாங்க முடியாமல் அமைதியாக இருந்தன. சிஎஸ்கே அணியிடம் 55 கோடியும், மும்பை அணியிடம் 45 கோடியும் மட்டுமே கையிருப்பு இருந்தன. ஆனால், 45 கோடி ரூபாய் மட்டுமே வைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக தொகைக்கு ஏலம் கேட்டது.

முதல் இரண்டு சுற்றுகளில் முக்கிய வீரர்கள் ஆன ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சாஹல், அர்ஷ்தீப் சிங் போன்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றன. அவர்களுக்கு ஏலத்தில் கடும் போட்டி இருந்தது. அதிக தொகை வைத்து இருந்த பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் அவர்களை வாங்க போட்டி போட்டன.
இதற்கிடையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகியோரை வாங்க முயன்றார். அதிலும் ரிஷப் பண்ட்டுக்கு 20 கோடிக்கும் அதிகமாக விலை கேட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏனெனில், 45 கோடியில் 20 கோடியை ஒரு வீரருக்கு மட்டுமே செலவிட்டால் மீதமுள்ள 25 கோடியில் மற்ற வீரர்களை வாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த ஏலத்தில் முகமது ஷமியை 10 கோடிக்கும், ஹர்ஷல் பட்டேலை 8 கோடிக்கும் வாங்கியது சன்ரைசர்ஸ் அணி.