ஜெட்டா : தமிழ்நாடு சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்டிஎம் மூலம் வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அவருக்காக ஏலம் கேட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 2 கோடி வரை விலை கேட்டது. சாய் கிஷோரின் மதிப்புக்கு அது மிகவும் குறைவான தொகை என்பதால், அதை பயன்படுத்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை வாங்கியது.
சாய் கிஷோர் டி20 போட்டிகளில் சிறப்பான பவுலிங் ரெக்கார்டு வைத்துள்ளார். அவர் 65 டி20 இன்னிங்ஸ்களில் 75 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதைவிட முக்கியமானது அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 5.74 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். அவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 18.5 ஆக உள்ளது. அதாவது அவர் வீசும் 18 பந்துகளுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். மேலும், தான் விட்டுக் கொடுக்கும் 17.74 ரன்களுக்கு ஒருமுறை ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

தற்போதைய உலகின் சிறந்த டி20 சுழற் பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு இணையாக உள்ளது. ஆனாலும், சாய் கிஷோருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 3 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் வரை தக்க வைத்து இருந்தது.
இந்த நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சாய் கிஷோர் பெயர் அறிவிக்கப்பட்டபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 75 லட்சத்துக்கு வாங்க முயன்றது. அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி அவருக்காக போட்டி போட்டது. 90 லட்சத்துடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டுமே அவருக்காக ஏலம் கேட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தியது.
அப்போது அவருக்கான விலையை அதிகரித்து கேட்க பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பஞ்சாப் அணி அவரது முந்தைய விலையான 3 கோடியை கேட்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு கோடி மட்டுமே கேட்டது. குஜராத் டைட்டன்ஸ் சற்றும் யோசிக்காமல் 2 கோடிக்கு சாய் கிஷோரை வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்பினார் சாய் கிஷோர்.