சென்னை : ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிறகு அதிக விலைக்கு ஏலம் போவாள் என கே எல் ராகுலை தான் பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியால் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்குப் போன தமிழக கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வெங்கடேஷ் ஐயர் படைத்திருக்கிறார்.அஸ்வின், தினேஷ் கார்த்திக்,முரளி விஜய் போன்ற வீரர்கள் கூட இந்த அளவுக்கு ஏலம் போனது கிடையாது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்கு திரும்புவதை தமது இலக்கு என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் இறுதி போட்டியில் என் அணி வெற்றி பெறும் தருணத்தில் நான் தான் ரன் அடித்தேன். அது எனக்கு முழு மன நிறைவை கொடுத்தது.
அப்போது என்னுடைய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்முனையில் நின்றார். டி20 கிரிக்கெட்டில் ரிஸ்க் எடுப்பது என்பது மிகவும் முக்கியம். நாம் எவ்வளவு அதிகமாக ரிஸ்க் எடுக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு பலனும் கிடைக்கும். நான் சில பந்தை அடிக்காமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டால், நானே என்னை அடித்து கொள்வேன். நான் ஒரு பந்தை அடித்து அது சரியாக கனெக்ட் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஆனால் இந்த பந்தை நான் அடித்து இருந்தால் சிக்ஸர் போயிருக்கும் என்று நினைக்கும் எண்ணம் எனக்கு பிடிக்காது. டி20 கிரிக்கெட்டில் தோல்வியும் ஒரு அங்கமாக இருக்கும். நாம் எவ்வளவு வெற்றி பெறுகிறோமோ, அந்த அளவுக்கு தோல்வியும் தழுவுவோம். நான் எப்போதுமே கிரிக்கெட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பேனே தவிரஅதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்க மாட்டேன்.
நான் இதை சொல்வதை பலரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரிய ரன்கள் என்பது முக்கியம்தான். ஆனால் அதைவிட தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம். மிக முக்கியமான ரன்சேஸில் வேகமாக 30 ரன்கள் எடுப்பது தான் முக்கியம். என்னுடைய அடிப்படை கிரிக்கெட் விஷயங்களில் நான் தீவிரமாக பயிற்சி செய்வேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஜிம்மில் நான் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன்.
ஒருமுறை கூட பயிற்சியை நான் தவறவிட்டது கிடையாது. இதேபோன்று இம்பாக்ட் வீரர் விதியை நான் குறை சொல்ல மாட்டேன். அந்த விதி இருந்ததால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உங்களிடம் பந்து வீசும் திறமை இருந்தால் யாரும் உங்களை ஓவர் வீசக்கூடாது என்று தடுக்க மாட்டார்கள். ஹர்திக் பாண்டியா, ரஸில்,சுனில் நரைன் போன்ற வீரர்கள் 4 ஓவர்களை தொடர்ந்து வீச தான் செய்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்கவில்லை.
இதனால் நீங்கள் சரியான ஆள் ரவுண்டராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். வருண் சக்கரவர்த்தி நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். வருண் சக்கரவர்த்தி பார்த்து எனக்கும் நல்ல நம்பிக்கை கிடைத்திருக்கிறது. வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்கு திரும்புகிறார் என்றால் நிச்சயம் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.