மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அநியாய விலைக்கு வாங்கப்பட்டதாக ஒரு வீரரை அனைத்து ரசிகர்களும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அந்த வீரர் வெங்கடேஷ் ஐயர். அவர் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களிலேயே மூன்றாவது அதிகபட்ச விலையை பெற்றார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 23.75 கோடிக்கு வாங்கியது.
ரிஷப் பண்ட் 27 கோடிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கும் வாங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அடுத்து வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடிக்கு வாங்கப்பட்டார். வெங்கடேஷ் இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிரடியாக ஆடுவதில் வல்லவராக இருந்தார்.

ஆல் ரவுண்டராகவும் செயல்படுவார் என்பதால் அவருக்கான மதிப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட்டை 20 கோடிக்கும் அதிகமான விலை கொடுத்து வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்களுக்கு அத்தனை விலை கொடுக்க முன்வராத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை வாங்குவதில் தீவிரமாக இருந்தது.
மற்ற அணிகளுடன் போட்டி போட்டு 23.75 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை வாங்கியது. வெங்கடேஷ் ஐயருக்கு 15 கோடி என்பது சரியான விலையாக இருக்கும் என விமர்சகர்களும் கருத்து கூறி இருந்தனர். இந்த நிலையில் ஏலம் முடிந்தவுடன் சமூக வலை தளங்களில் ஏலத்தின் செயல்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது.
அதில் கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் யார் என்ற விவாதத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தாக கூறி இருப்பது வெங்கடேஷ் ஐயரைத்தான். சிலர் ஸ்ரேயாஸ் ஐயர் பெயரையும் சேர்த்து கூறி உள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என்பதால் அவருக்கான விலையில் நியாயம் உள்ளது.
எனினும், வெங்கடேஷ் ஐயருக்கு அளிக்கப்பட்டது சரியான தொகை தானா? என்ற கேள்வி உள்ளது. கடந்த ஆண்டு இதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு வாங்கி இருந்தது. ஸ்டார்க் லீக் சுற்றி முழுவதும் சராசரியான செயல்பாட்டையே வெளிப்படுத்தினார்.
2024 ஐபிஎல் இறுதிப் போட்டியில் மட்டும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி ஐபிஎல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார் ஸ்டார்க். ஆனால், வெங்கடேஷ் ஐயர் கடந்த ஆண்டு லீக் சுற்று, நாக் - அவுட் போட்டிகள் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். எனவே, அவருக்கான விலை நியாயமானது தான் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.