ஜெட்டா: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக ஐபிஎல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலம் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் ஆர்சிபி அணி விராட் கோலி குறிப்பிட்டு சொன்ன பல வீரர்களை ஏலத்தில் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடருடன் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் மூன்று ஆண்டுகள் ஃபாப் டூ பிளசிஸ் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். தற்போது மெகா ஏலம் நடைபெற்றதால் பல முக்கிய வீரர்களை ஆர்சிபி அணி அணியில் இருந்து விடுவித்தது.

கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ்-உம் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கு முக்கிய காரணமே விராட் கோலியை அணியின் கேப்டன் ஆக்க வேண்டும் என்ற திட்டம் தான் என கூறப்படுகிறது. இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதில் இருந்து கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதும் ஒருமுறை கூட உலகக் கோப்பைகளையோ, ஐசிசி கோப்பைகளையோ வெல்லவில்லை. அதேபோல ஐபிஎல் தொடரிலும் நீண்ட காலமாக ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த போதும் அவரால் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவர் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக ஒரு முறையாவது கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாக அவர் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் யார், யாரை? வாங்க வேண்டும் என்ற ஆலோசனைகளை ஆர்சிபி நிர்வாகத்திற்கு அளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி ஆர்சிபி இயக்குநர் மோ போபாத்திடம் கேட்ட போது அவர் இதுவரை கேப்டன் யார் என்பதை முடிவு செய்யவில்லை எனக் கூறினார். ஆனால், விராட் கோலியை ஐபிஎல் தொடருக்கு முன் ஆர்சிபி அணி கேப்டனாக அறிவிக்கும் என ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.