ஜெட்டா: வாஷிங்டன் சுந்தரை வாங்க 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சுழற் பந்துவீசும் ஆல் ரவுண்டராக இருப்பார் என்பதாலும், சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருந்ததாலும் அவரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
நேற்று நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூத்த சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கும் செய்வார் என்ற நிலையில், அஸ்வினை விட கூடுதல் தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவரை வெறும் 3.20 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் 8.75 கோடி ரூபாய் சம்பளத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருந்தார்.
சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், உள்ளூர் போட்டிகளிலும் அதிக ரன் குவித்தும், அதிக விக்கெட்கள் வீழ்த்தியும் சிறந்த ஆல் ரவுண்டர் என நிரூபித்து இருந்தார். அதனால், ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு அதிக போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவரை வாங்க இரண்டு அணிகள் மட்டுமே போட்டி போட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் அவரை வாங்க போட்டி போட்டன. அதன் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3.20 கோடி ரூபாய்க்கு வாஷிங்டன் சுந்தரை வாங்கியது. வாஷிங்டன் சுந்தர் மிகக் குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணியிடம் குறைவான மீதத் தொகை இருந்ததும் ஏலத்தில் சிஎஸ்கே அணி பலரை வாங்காமல் போக முக்கிய காரணமாக இருந்தது. அதே சமயம், நல்ல வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை என ஏலத்தின் முதல் நாள் அன்றும், இரண்டாம் நாள் அன்றும் சிஎஸ்கே அணி பலரை வாங்க முயன்றது. ஆனால், நல்ல வேகப் பந்துவீச்சாளர்களுக்கான ஏலத் தொகை 7 - 8 கோடிகளை தாண்டியதால் சிஎஸ்கே அணி பின்வாங்கியது.