லண்டன்: கிரிக்கெட் விளையாட்டு இன்று உலக அளவில் அசுர வளர்ச்சியை கண்டதற்கு ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) தொடர் முக்கிய காரணம் ஆகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த டி20 தொடர் கிரிக்கெட் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த தொடரை உருவாக்கியே தீருவது என பிடிவாதமாக இருந்து உருவாக்கியது அன்றைய பிசிசிஐ உயர் அதிகாரிகளில் ஒருவராக இருந்த லலித் மோடி.
அவர் ஐபிஎல் தொடரின் துவக்கத்திற்கு யார் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது பற்றி சமீபத்தில் பேசி இருக்கிறார். யுவராஜ் சிங் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது தான் ஐபிஎல் தொடரை துவங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இது பற்றி லலித் மோடி பேசுகையில், "2007 இல் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடியது. அப்போது ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடிப்பது அல்லது ஒரு ஓவரில் 6 விக்கெட் எடுப்பது என்பது மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என எனக்கு தோன்றியது. அதனால் இந்திய அணியுடன் நான் உலக கோப்பை சென்ற போது எந்த ஒரு வீரராவது ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தாலோ அல்லது ஒரு ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தினாலோ அவருக்கு போர்ஷே காரை வாங்கி பரிசளிப்பேன் என்று கூறி இருந்தேன்." என்றார்.
மேலும், "இதெல்லாம் சாத்தியமா? என அன்று பலரும் நினைத்தார்கள். ஆனால், யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார். அத்துடன் டி20 கிரிக்கெட் முற்றிலுமாக மாறிவிட்டது. அன்று அனைத்து செய்தி சேனல்களிலும, பத்திரிக்கைகளிலும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இதுவே பேச்சாக இருந்தது. அது ஒரு புயல் போல கிரிக்கெட் உலகை தாக்கியது. யுவராஜ் சிங் ஆறு சிக்ஸ் அடித்தபின், போட்டியின் முடிவில் நேராக என்னிடம் வந்து போர்ஷே கார் எங்கே? என்று கேட்டார். அங்கிருந்து தான் ஐபிஎல் தொடருக்கான எண்ணம் உருவானது." என்றார்.
ஐபிஎல் தொடர் உருவானதன் பின்னணியில் யுவராஜ் சிங் அடித்த ஆறு சிக்ஸர்கள் இருப்பதாக லலித் மோடி கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்கு காரணம் யுவராஜ் சிங் என அந்த தொடரை உருவாக்கியவரே கூறி இருக்கிறார் என சிலாகித்து வருகின்றனர்.