ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவர் 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்ல இருந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இடையே புகுந்ததால் அவரது விலை மேலும் எகிறியது.
அது சாஹலுக்கு அதிர்ஷ்டமாகவும் அமைந்தது. ஐபிஎல் ஏல வரலாற்றில் இந்திய ஸ்பின்னருக்கு கிடைத்த அதிகபட்ச விலையாகவும் இது அமைந்தது. 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார் சாஹல். அவர் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையிலும் அவரை அணியில் இருந்து விடுவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இதை அடுத்து சாஹல் ஏலத்தில் பங்கேற்றார். அவரது பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டவுடன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அவரை வாங்க முயன்றன. சிஎஸ்கே அணி 5.5 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. அதன் பின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் களத்தில் குதித்தன.
குஜராத் அணி விலகியது. 14 கோடி ரூபாய் வரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் கேட்டது. அத்துடன் லக்னோ அணி விலகியது. அத்துடன் ஏலம் முடிந்து விட்டதாக அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திடீரென சாஹலை வாங்க முயன்றார். இதை அடுத்து சாஹலின் விலை அதிரடியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.75 கோடி வரை சென்றது.
அப்போதும் விடாத பஞ்சாப் கிங்ஸ் அணி 18 கோடி ரூபாய் ஏலம் கேட்டது. அத்துடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விலகிக் கொண்டது. இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாஹலை 18 கோடிக்கு வாங்கியது. பல அணிகளும் முட்டி மோதியதால் சாஹலின் விலை அதிகரித்தது. இதுவே இந்திய ஸ்பின்னர் ஒருவருக்கு கிடைத்த அதிகபட்ச ஐபிஎல் ஏல விலை ஆகும்.