மும்பை: 2026 ஐபிஎல் மினி ஏலம் நாளை மறுநாள் (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. "சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு முறை" கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி மற்றும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அவரை ஆல்-ரவுண்டர் என நம்பி ஏமாற வேண்டாம் என சூசகமாக கூறி இருக்கிறது பிசிசிஐ.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான தீபக் ஹூடா, கடந்த ஐபிஎல் சீசனிலும் இதே "சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு" பட்டியலில் இருந்தார். அதன் காரணமாகவே, கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியும், அவர் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை. தற்போது மீண்டும் அவரது பெயர் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக பிசிசிஐ சனிக்கிழமை (டிசம்பர் 13) அன்று அதிகாரப்பூர்வமாக அணிகளுக்குத் தெரிவித்துள்ளது.

தீபக் ஹூடா ஒரு ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர். சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் அவர் மிகக்குறைவாகவே பந்துவீசியுள்ளார். ரஞ்சி டிராபியில் ஒரு ஓவர் மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடரில் 5 ஓவர்கள் என மொத்தம் 6 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார்.
சமீபத்தில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினாலும், அவரது பந்துவீச்சு முறை ஐபிஎல் விதிகளின்படி சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. ஒருவேளை ஐபிஎல் போட்டியில் அவர் பந்துவீசி, நடுவர்கள் புகார் அளித்தால், அவர் பந்துவீசத் தடை விதிக்கப்படலாம். இதனால் அவரை "ஆல்-ரவுண்டராக" நம்பி ஏலத்தில் எடுப்பது அணிகளுக்குப் பெரும் ரிஸ்க் ஆக இருக்கும்.
வரும் ஏலத்தில் ஆல்-ரவுண்டர்களுக்கான 'AL1' பிரிவில் தீபக் ஹூடா இடம்பிடித்துள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சம். வெங்கடேஷ் ஐயர், ரச்சின் ரவீந்திரா, வனிந்து ஹசரங்கா போன்ற நட்சத்திரங்களோடு இவரும் வரிசையில் உள்ளார். ஆனால், பந்துவீச்சு சிக்கல் இருப்பதால், அணிகள் அவரை வெறும் பேட்ஸ்மேனாகக் கருதி எடுக்குமா என்பது சந்தேகமே.
பிசிசிஐ அனுப்பிய பட்டியலில் தீபக் ஹூடா மட்டுமல்லாமல் வேறு சிலரும் உள்ளனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆபித் முஷ்டாக்கும் இந்த சந்தேக பட்டியலில் இருக்கிறார். அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சம் ஆகும்.
தடை செய்யப்பட்டவர்கள்: கர்நாடகாவின் கே.எல்.ஸ்ரீஜித் மற்றும் மத்திய பிரதேசத்தின் ரிஷப் சவுகான் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் பந்துவீசவே தடை விதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏலத்தில் இருந்தாலும், இவர்களால் பந்துவீச முடியாது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி வீரர்களை வாங்கும் முன், இந்த எச்சரிக்கை பட்டியலை கவனத்தில் கொள்ளுமாறு அணிகளுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.