லக்னோ: ஐபிஎல் 2026 ஏலத்தில் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெயர் 'பிரசாந்த் வீர்'. அடிப்படை விலையான வெறும் 30 லட்சத்துடன் ஏலத்திற்கு வந்த இந்த 20 வயது இளைஞரை, ரூ.14.20 கோடி கொடுத்து வாங்கி அனைவரையும் அதிர வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், அவருக்கு மாற்றாக ஒரு தரமான ஆல்-ரவுண்டரை தேடிய சிஎஸ்கே, இந்த உத்திர பிரதேசத்து "தங்கத்தை" தட்டித் தூக்கியுள்ளது. இந்த நிலையில், பிரசாந்த் வீரின் மாமா அவர் எப்படி கிரிக்கெட்டுக்குள் நுழைந்து முன்னேறினார் என்பது குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.
உத்திர பிரதேசம், அமேதி மாவட்டத்தில் உள்ள சஹாஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் வீர். அவரது வயது 20. இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் லோயர் ஆர்டரில் சிக்ஸர்களை பறக்கவிடும் அதிரடி மன்னன். டேவிட் மில்லர் போல ஆடுவதால் இவரை உள்ளூர் கிரிக்கெட்டில் "மில்லர்" என்று செல்லமாக அழைக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என பல அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியில் சிஎஸ்கே இவரை ரூ.14.20 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்கேப்ட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
பிரசாந்த் வீரின் இந்த அசுர வளர்ச்சி குறித்து 'மைக்கேல்' (MyKhel) தளம் அவரது மாமா சச்சின் திரிபாதியுடன் பிரத்யேகமாக உரையாடியது. அப்போது பேசிய அவர், "எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இவ்வளவு சீக்கிரம் அவன் இந்த உயரத்தை தொடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவன் சிறப்பாக செயல்படுவான் என்று நம்புகிறோம். முழுக் குடும்பமும் அவனுக்கு துணையாக இருக்கிறோம்" என்றார்.
மேலும் பிரசாந்தின் கடின உழைப்பு பற்றி பேசிய அவர், "அவன் இந்த நிலைக்கு வந்ததற்கு முழுக் காரணம் அவன் மட்டும்தான். யாருடைய சிபாரிசும் கிடையாது, யாரும் அவனை முன்னேற்ற எதையும் செய்யவில்லை. அவனது சொந்த உழைப்பால் உயர்ந்திருக்கிறான்.
11 வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறான். அவனுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதால், விளையாடிக் கொள் என்று குடும்பத்தினர் ஆதரவு கொடுத்தோம். மற்றபடி அவனது திறமை தான் அவனை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
உத்திர பிரதேச டி20 லீக் தொடரில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய இவர், 320 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசியதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். அதேபோல் சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் 167 ஸ்ட்ரைக் ரேட்டில் 112 ரன்கள் மற்றும் 6.45 எகானமியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இடது கை ஸ்பின் மற்றும் அதிரடி பேட்டிங் இருப்பதால், ஜடேஜாவின் இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக "தல" தோனியின் கீழ் விளையாடப் போவது பிரசாந்த் வீரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.