அபுதாபி: ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய யுத்திகளை தலைகீழாக மாற்றி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி எப்போதுமே ஏலத்தில் வயதான வீரர்களை தேர்வு செய்யும். இல்லையென்றால் அனுபவம் பெற்று இந்திய அணிக்காக விளையாடி தற்போது வாய்ப்பு கிடைக்காத வீரர்களை தேர்வு செய்யும்.
இது பலமுறை சிஎஸ்கே அணிக்கு கை கொடுத்திருக்கிறது. ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் எல்லாம் அப்படித்தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். ஆனால் கடந்த சீசனில் இதை யுத்தியை பயன்படுத்தி தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.

ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இதனால் சிஎஸ்கே அணி இந்த மினி ஏலத்தில் தங்களுடைய யுத்திகளை முற்றிலும் மாற்றி இருக்கிறது. வயதான வீரர்களை எடுக்கும் என பெயர் போன சிஎஸ்கே நடப்பு ஏலத்தில் இளம் வீரர்களை குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை அதிகளவு தேர்வு செய்து இருக்கிறது.
சஞ்சு சாம்சனை வாங்கியது, கடந்த சீசனிலே ஆயுஷ் மாத்ரே, பிரவீஸ் போன்ற வீரர்களை அணியில் சேர்த்தது என சிஎஸ்கே அணி சிறப்பான திட்டத்தை தீட்டி அணியை கட்டமைத்துக் கொண்டது. இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சு மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் போன்ற இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டி இருந்தது.
அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணி அகில் உசேன் என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர் ஜடேஜாவுக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கலாம். அதே போன்று இந்திய சுழற் பந்துவீச்சாளரான இளம் வீரர் பிரசாந்த் வீரை தேர்வு செய்துள்ளது. அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மா என்ற 19 வயது வீரரையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சுழற் பந்துவீச்சை பலமாக்கும் விதமாக ராகுல் சாகர் என்ற ஐபிஎல் அனுபவம் பெற்ற வீரரையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதே போன்று சிஎஸ்கே அணியில் நடுவரிசை பேட்டிங்கில் சில குறைகள் இருந்தது. கடந்த முறை ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர் போன்ற வீரர்கள் ஏமாற்றியதால் இந்த ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் சிஎஸ்கே அணி இருந்தது.
இதனால் சர்பராஸ் கான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவ் ஷார்ட் ஆகியோரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோன்று பதிரனாவுக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இதற்காக நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்றி மற்றும் ஜாக் ஃபோக்கஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை சிஎஸ்கே அணி எடுத்திருக்கிறது.
ஏற்கனவே அணியில் நாதன் எல்லீஸ், ஜெமி ஓவர்டன் போன்ற வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய தொடக்க வீரர்கள், நடுவரிசை வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், இந்திய ஆல்ரவுண்டர்கள், சுழற் பந்துவீச்சாளர்கள் என சிஎஸ்கே பலமாக விளங்குகிறது. எனினும் ஒரே ஒரு குறையாக சிஎஸ்கே அணியில் அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லை.