அபுதாபி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இதில் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்கள் அணியை பலப்படுத்த வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். இந்த ஏலம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
காரணம், கேமரூன் கிரீனை ரூபாய் 25.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கி மிரட்டி விட்டது. கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரை அதிக விலை கொடுத்து வாங்கியது கேமரூன் கிரீனை தான். அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் கேமரூன் கிரீன் படைத்தார்.
அதேபோல் இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பத்திரானாவை கொல்கத்தா அணி ரூபாய் 18 கோடிக்கு வாங்கியது. இதனால் அதிக விலைக்கு ஏலம் போன இலங்கை வீரர் என்ற சாதனையை மதிஷா பத்திரனா படைத்தார். கேமரூன் கிரீன் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை மட்டும் இல்லாமல், அதிக விலைக்கு ஏலம் போன ஆஸ்திரேலிய வீரராகவும் உள்ளார். இப்படி இருக்கும்போது கேமரூன் கிரீன் மற்றும் மதிஷா பத்திரானாவுக்கும் இடையில் மேற்குறிப்பிட்ட அந்த சாதனைகளை கடந்தும் ஒரு ஒற்றுமை உள்ளது.

விதி: அதாவது ரூபாய் 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மதிஷா பத்திரானாவுக்கும், ரூபாய் 25.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட, கேமரூன் கிரீன் என இருவருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலா 18 கோடி மட்டும் கொடுத்தால் போதுமானது. அதற்கு காரணம் பிசிசிஐ தரப்பில் ஐபிஎல்-இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் தான்.
ஒற்றுமை: அதாவது, ஒரு வீரரை ரூபாய் 18 கோடிகளுக்கு மேல் எத்தனை கோடிகள் கொடுத்து வாங்கினாலும், அணி நிர்வாகம் வீரருக்கு ரூபாய் 18 கோடிகள் கொடுத்தால் போதுமானது. மீதித் தொகையை இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக செலவிட பயன்படுத்தப்படும் எனவும் அணிகளின் கணக்கில் இருந்து மொத்த தொகை கழிக்கப்படும் என்றும் அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பத்திரனாவுக்கும் கேமரூன் கிரீனுக்கும் ரூபாய் 18 கோடிகள் கொடுத்தால் போதுமானது.