மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்தில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் பிரித்விஷா பெயர் 3வது முறையாக வந்த பிறகு தான், கடைசியில் டெல்லி அணி தேர்வு செய்து அவருடைய மானத்தை காப்பாற்றியது. கடந்த சீசனில் பிரித்வி ஷா எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் சையது முஸ்டாக் அலி தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார்.
சையது முஸ்டாக் அலி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 66 ரன்கள், பீகார் அணிக்கு எதிராக 66 ரன்கள் என பிரித்விஷா குவித்த நிலையில் அவர் நல்ல பார்மில் உள்ளார். இந்த சூழலில் பிரித்வி ஷா பெயர் ஏலத்தில் 2 முறை வந்ததும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் அவருடைய அடிப்படை விலை 75 லட்சம் ரூபாயாக தான் இருந்தது.

இதே போன்று சர்பிராஸ் கானை முதல் ரவுண்டில் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், ஏலத்தில் கடைசியில், அவர் பெயர் வந்ததும் சிஎஸ்கே அணி அடிப்படை விலைக்கு வாங்கியது. இன்று கூட அவர் 15 பந்தில் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிரித்வி ஷா பெயர் 2வது முறையாக ஏலத்திற்கு வந்தும் யாரும் தேர்வு செய்யவில்லை.
இதனால், பிரித்வி ஷா பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பிரித்வி ஷா, உள்ஞர் போட்டி ஒன்றில் சக வீரரை அடிக்க பாய்ந்ததும், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்டதும், இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சமயத்தில் ஏலத்தின் கடைசி நிமிடத்தில் 3வது முறையாக பிரித்வி ஷா பெயர் வந்தது.
அப்போது 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் டெல்லி அணி வாங்கியது. இதன் மூலம் பிரித்வி ஷா மானத்தை டெல்லி அணி காப்பாற்றி இருக்கிறது. டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா,1892 ரன்கள் அடித்துள்ளார். தற்போது, அவர் மீது டெல்லி அணி நம்பிக்கை வைத்துள்ளது. இந்த நம்பிக்கையை காப்பாற்றி மீண்டும் அவர் சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.