அபுதாபி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்பராஸ் கானை அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிருக பலம் பெற்று இருக்கிறது.
இதன் மூலம் கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் விலை போகாத சர்பராஸ் கான் தற்போது ஐந்து முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணிக்குள் வந்திருக்கிறார். சர்பராஸ் கான் பெயர் முதல் ரவுண்டில் வந்தது. அப்போது அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த சூழலில் ஏலம் முடிவதற்கு முன்பு மீண்டும் சர்பராஸ் கான் பெயர் வந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கி இருக்கிறது. இன்று காலையில் கூட சர்பராஸ் கானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தி இருந்தார்.
இதே கருத்தை ஸ்ரீகாந்த் கூறியிருந்த நிலையில் சிஎஸ்கே அணி, சர்பராஸ் கான் வாங்கி உள்ளது. சிறப்பான ஃபார்மில் இருக்கின்றார். இன்று நடைபெற்ற சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் 15 பந்துகளில் சர்பராஸ் கான் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். சர்பராஸ் கான் நடப்பு SMAT தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 320 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 183 என்ற அளவில் உள்ளது.
நடப்பாண்டில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் கான் 47 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதில் 7 சிக்ஸரும்,8 பௌண்டரியும் அடங்கும். தற்போது சிஎஸ்கே அணிக்கு வந்திருப்பதால் அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. சிஎஸ்கே அணியில் நீண்ட காலமாக நம்பர் மூன்று அல்லது நம்பர் 4 இடத்திற்கு சரியான வீரர் இல்லாமல் இருந்தார்கள்.
தற்போது சர்பராஸ் கான் வந்திருப்பதன் மூலம் அந்த குறை நீக்கப்பட்டிருக்கிறது. எனினும் சிஎஸ்கே அணி சர்பராஸ் கானுக்கு பெரிய அளவு வாய்ப்பு கொடுத்து அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பெஞ்சில் அமர வைத்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விடக்கூடாது என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.