மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று மதியம் 2:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் போட்டி போட உள்ளனர்.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இரண்டாவது அதிகபட்சமாக 43 கோடியே 40 லட்சம் ரூபாய் கைவசம் உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி சர்பராஷ் கானை கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சர்பராஸ் கான் இருக்கும் ஃபார்ம் மிகவும் அபாரமாக இருக்கின்றது. அவரை நீங்கள் ஏலத்தில் எடுத்தீர்கள் என்றால் குறைந்தபட்சம் 4 அல்லது 6 போட்டிகளில் விளையாடினால் கூட உங்களுக்கு இரண்டு போட்டிகளில் வெற்றியை தேடி தருவார்.
இதன் மூலம் அவரை தேர்வு செய்தது நியாயமாக மாறிவிடும். சென்னை ஆடுகளத்தில் பேட்டிங்கில் டெக்னிக் உள்ள வீரர்கள் மட்டுமே ஜொலிக்க முடியும். அதுவும் சிஎஸ்கே போன்ற அணியின் சிஸ்டத்திற்குள் சர்பராஸ் வந்தால், அது அவருக்கு நன்மை பயக்கும். போட்டியை எப்படி வெல்வது என்பதை சர்பராஸ் கற்றுக் கொள்வார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி நல்ல பயனை பெரும். அது மட்டுமில்லாமல் சர்பராஸ் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கின்றார். நாம் கடந்த சீசனில் வெங்கடேஷ் ஐயருக்கு அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்டதை பார்த்தோம். ஆனால் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் சர்பராஸ் நல்ல ஃபார்மில் இருந்தும் அவரை யாரும் வாங்கவில்லை.
இது போன்ற வீரர்கள் எல்லாம் உங்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்க மாட்டார். சர்பராஸ் கானுக்கு அனைத்து விதமான ஷாட்களும் ஆட தெரியும். முக்கியமாக அவருடைய நம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். சர்பராஸ் தன்னுடைய பெயரை அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளார்.
இதுவரை சர்பராஸ் கான் ஆர் சி பி, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி உள்ளார். 50 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 133என்று அளவிலும் சராசரி 23 என்ற அளவில் உள்ளது. இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்படாமல் இருக்கின்றார். தற்போது நடைபெற்ற வரும் சையது முஸ்டாக் அலி தொடரில் சர்பிராஸ் கான் 6 போட்டிகளில் 256 ரன்கள் அடித்து இருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 183 என்ற அளவில் சராசரி 64 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.