அபுதாபி: ஐபிஎல் 2026க்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் ஐபிஎல் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் காத்திருந்தது என்றே கூறலாம். அதுவும் கொல்கத்தா அணி தான் இந்த ஏலத்தில் அதிகப்படியான தொகையுடன் களமிறங்கிய அணி. இப்படி இருக்கும்போது கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் வீரர்களுக்கும் ஷாக் கொடுத்தது. கொல்கத்தா அணி ரூபாய் 64 கோடியே 30 லட்சத்துடன் களமிறங்கி மொத்த ஏலத்தையும் ஒரு கலக்கு கலக்கியது.
இப்படி இருக்கும்போது இந்த ஏலத்தில், கொல்கத்தா அணி கொடுத்த முக்கியமான சர்ப்ரைஸ்களில் ஒரு சர்ப்ரைஸ், அரசியல்வாதியின் மகனை ஏலத்தில் எடுத்தது தான். அதாவது, பூர்னியா தொகுதியின் எம்.பி பப்பு யாதவின் மகன், ஷர்தாக் ராஜனை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணியின் உரிமையாளராக நடிகர் ஷாரூக் கான் இருப்பதால், சிபாரிசு ஏதாவது நடந்து அதன் மூலம் ஷர்தாக் ராஜனை அணியில் எடுக்க காரணமா என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் அப்படி கேள்வி கேட்டவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

உள்நாட்டு போட்டிகள்: அதாவது, ஷர்தாக் ராஜன் அண்மையில் கூட டெல்லி பிரீமியர் லீக்கில் தனது அதிரடியான பேட்டிங்கினால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் கடந்த 2016 அன்று சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானர். அதைத் தொடர்ந்து 2016-17 விஜய் ஹசாரே டிராபியில் டெல்லிக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் களமிறங்கினார். 2018 இல், ரஞ்சி டிராபியிலும் காலடி எடுத்து வைத்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
செம ரெக்கார்டு: இந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி பிரீமியர் லீக்கில் 9 இன்னிங்ஸில் களமிறங்கி 449 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் இந்த சீசனில் அவரது பேட்டிங் ஆவரேஜ், 56.12 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 146.73 ஆக உள்ளது. இந்த சீசனில் மட்டும் 21 சிக்சர்கள் பறக்க விட்டுள்ளார். இப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவருக்கு சிபாரிசு எல்லாம் தேவையில்லை என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.