மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் இரண்டாவது நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி வந்தது. முதல் நாள் ஏலத்திலே பல முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிவிட்டது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடு வரிசையில் பேட்ஸ்மேன்கள் தேவைப்பட்டார்கள்.
இதற்காக சிஎஸ்கே அணி சில வெளிநாட்டு வீரர்களை வாங்க முதல் நாள் முயற்சித்தது. ஆனால் சிஎஸ்கே நினைத்த வீரர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளான் பி ஐ பயன்படுத்தி உள்ளூர் இந்திய வீரர்களை அந்த இடத்திற்கு வாங்கி இருக்கிறது.

ஏற்கனவே சாயிக் ரஷீத், ராகுல் திருப்பாதியை சிஎஸ்கே வாங்கிய நிலையில் தற்போது 29 வயது வீரரான இந்தியாவுக்காக விளையாடிய தீபக் ஹூடாவை சிஎஸ்கே அணி ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. தீபக் ஹூடா, லக்னோ அணிக்காக கடந்த மூன்று சீசன்களாக விளையாடி வருகிறார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என தீபக் ஹூடா இரண்டிலுமே சிறப்பாக செயல்படுவார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக பத்து ஒரு நாள் போட்டிகளிலும், 21 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடிருக்கிறார். குறிப்பாக தீபக் ஹூடா அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 57 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் விளாசி இருக்கிறார்.
இதில் ஆறு சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் அடங்கும் தீபக் ஹூடா அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் அவருக்கு சரியான வழிகாட்டுதல் அமையவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு தீபக் ஹூடா வந்திருப்பதால் அவரை சிஎஸ்கே அணி நன்றாக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணி நடு வரிசையில் டாரல் மிட்செல் போன்ற வீரர்களை பயன்படுத்திய நிலையில் தற்போது அதே ரோலுக்கு தீபக் ஹூடா பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் தீபக் ஹூடா வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். 75 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் இருந்த தீபக் ஹூடா மெகா ஏலத்தில் பங்கு பெற சிஎஸ்கே அவரை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.