IPL Auction- பஞ்சாப் அணிக்கு விளையாட விரும்பவில்லை.. இருப்பதிலேயே மோசமான அணி அது! EX-CSK வீரர் சாடல்
மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் சில மணித்துளிகளில் தொடங்க உள்ள நிலையில் பஞ்சாப் அணி மீது சிஎஸ்கே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணப்பா கௌதம் கடும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். பஞ்சாப் அணியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கிருஷ்ணப்பா கெளதம் தேர்வு செய்யப்பட்டார்.
6 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன அவர் மொத்தமாகவே பஞ்சாப் அணியில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட் பந்து வீச்சிலும் பேட்டிங்கில் 42 ரன்களும் அடித்தார். இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணி உங்களை ஏலத்தில் எடுக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் நான் நேர்மையான பதிலை அளிக்கிறேன். பஞ்சாப் அணிக்கு நான் மீண்டும் செல்ல கூடாது என விரும்புகிறேன். ஏனென்றால் பஞ்சாப் அணியுடன் எனக்கு எந்த ஒரு நல்ல அனுபவமும் கிடையாது. ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் மட்டும் முக்கியம் கிடையாது. கிரிக்கெட் தவிர பல விஷயங்கள் இருக்கின்றது.
ஆனால் பஞ்சாப் அணியில் எனக்கு பல விஷயங்கள் தவறாகவே நடந்தது. எனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை. நான் ஒரு அணிக்காக விளையாடுகிறேன் என்றால் 100 சதவீதத்திற்கு மேல் களத்தில் என்னுடைய பங்களிப்பை கொடுப்பேன். ஆனால் பஞ்சாப் அணி என்னை ஏலத்தில் மீண்டும் எடுத்தால், அவர்களுக்காக நான் 100 சதவீதத்திற்கு மேல் என்னுடைய பங்களிப்பை கொடுக்கவே மாட்டேன் என்று கிருஷ்ணப்பா கெளதம் பஞ்சாப் அணியை சாடியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள கிருஷ்ணப்பா கௌதம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் 247 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 166. இம்முறை பஞ்சாப் அணி 110 கோடி ரூபாயுடன் ஏலத்தில் சந்திக்கிறது. ஏலத்திற்கு முன்பு பஞ்சாப் அணியை கடுமையாக கிருஷ்ணப்பா கவுதம் சாடி இருக்கிறார். இந்த சூழலில் பஞ்சாப் அணிக்கு ரிஷப் பந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications