பெங்களூர்: நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளார் மோகித் ஷர்மா. சர்வதே வீரர்கள் பலரை ஏலத்தில் எடுத்த அணிகள் தயாராக இல்லாத நிலையில், சென்னைக்காக விளையாடி வந்த மோகித் ஷர்மாவை ரூ.6.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
9-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.

பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், ஆல்-ரவுண்டருக்கான ஏலம் முடிந்ததும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் தவல் குர்கர்ணியை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் லயன்ஸ் அணி ஏலம் எடுத்த நிலையில், கனே ரிச்சர்ட்சனை ஏலம் எடுக்க ஆளில்லாதது ஆச்சரியம் தந்தது.
இந்தியாவின் பிரவீன் குமாரை ரூ.3.5 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்த நிலையில், நியூசிலாந்தின் டிம் சவுத்தியை ரூ.2.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்தியாவின் டிண்டாவை ஏலம் எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை.
அடுத்ததாக, சிஎஸ்கே அணிக்காக ஆடிவந்த மோகித் ஷர்மாவை ஏலம் எடுக்க அணிகள் நடுவே கடும் போட்டி நிலவியது. பிரீத்தி ஜிந்திவின், பஞ்சாப் அணி, மோகித் ஷர்மாவை ரூ.6.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அசத்தியது. இன்றைய ஏலத்தில், பஞ்சாப் அணி ஏலம் எடுத்த முதல் வீரர் மோகித் ஷர்மா என்பது சிறப்பு. அதேநேரம் ஜேம்ஸ் பட்டின்சனை ஏலம் எடுக்க ஆளில்லை.