பெங்களூரு: ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைய காரணமாக இருந்த பவுன்சரை வீசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட்டை ஐபிஎல் அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.1 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில், நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதிய 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது.

தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் களத்திலேயே சுருண்டு விழுந்தார். சிகிச்சை பலனளிக்காமல் சில நாட்களில் அவர் இறந்தார். மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் சிதறியதால் ஹியூக்ஸ் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பந்து வீசிய சீன் அப்பாட்டுக்கு மனநல கவுன்சலிங்குகள் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டினர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது சீன் அப்பாட்டை ரூ.1 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க உள்ளார் சீன் அப்பாட். எதிரணி வீரர்கள் ஜாக்கிரதையாக உயர்தர ஹெல்மெட்டுகள் அணிவது நலம்.