மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த இளம் வீரராக கருதப்பட்ட பிரித்வி ஷா தன்னுடைய அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு கூட ஏலம் போகாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
அண்டர் 19 கிரிக்கெட்டில் பிரிதிவிஷா இந்திய அணி கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்று கொடுத்தார்.அது மட்டுமல்லாமல் ஐபிஎல் மற்றும் இந்திய டெஸ்ட் அணி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட பிரித்வி ஷா, திடீரென்று காயம் மற்றும் கிரிக்கெட்டில் போதிய கவனம் இல்லாததால் பார்ம் அவுட் ஆனார்.

உடல் தகுதி இல்லை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பிரித்விஷா அண்மையில் மும்பை ரஞ்சி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த சூழலில் கடந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஏழரை கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிரித்விஷா, தற்போது 75 லட்சம் ரூபாய்க்கு கூட யாராலும் தேர்வு செய்யப்படவில்லை.
இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக விளங்கிய ஷர்துல் தாக்கூர் கடந்த முறை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அதற்கு முன்பு 2022 மற்றும் 23ஆம் ஆண்டு 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி மற்றும் கேகேஆர் அணியால் முறையே வாங்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது சர்துல் தாக்கூர் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்திருந்தார். இவரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
இந்த இரண்டு வீரர்களும் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் என்ன என்பது குறித்து பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளர் ஆன ரிக்கி பாண்டிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பிரித்விஷாவை பொறுத்தவரை நான் பணிபுரிந்ததிலே மிகச்சிறந்த திறமை வாய்ந்த இளம் வீரர் என்றால் அது அவர்தான்.
எனினும் கடந்த காலத்தில் அவர் செய்த தவறுகளால் தான் தற்போது அவர் சிக்கிக் கொண்டார். இதை தவிர என்னால் வேறு ஏதும் சொல்ல முடியவில்லை. சர்துல் தாக்கூரை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அதிக விலைக்கு சென்றார். ஆனால் தற்போது அவரால் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக தான் சர்துல் தாக்கூரையும் யாரும் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம் என்று பாண்டிங் கூறியுள்ளார். சர்பிராஸ் கான் அதிரடி வீரராக அறியப்பட்டாலும் அவருடைய உடல் தகுதி டி20 ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் இல்லை என கூறப்படுகிறது. மேலும்,கடந்த காலங்களிலும் அவர் பெரிய தாக்கத்தை ஐபிஎலில் ஏற்படுத்த்வில்லை. இதனால் தான் சர்பராஸ் கானை, ஐபிஎல் அணிகள் ஏலம் கேட்கவில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.