
பிசிசிஐ ஏலம்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று பேட்டி அளித்திருந்தார். அதில், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளதாக கூறினார். மேலும், அதில் இந்த முறை 40,000 கோடிக்கும் மேல் ஏலத்தொகை சுலபமாக எகிறும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

3 மடங்கு அதிகரிக்கும் லாபம்
தற்போது 2018 முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதனை அப்போது ரூ.16,347.50 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஏலத்தில் எடுத்திருந்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஏலத்திற்கு தான் ரூ.40,000 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. இது பழைய ஒப்பந்தத்தை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

என்ன காரணம்
கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளுக்கான மதிப்புகள் ஏகபோகத்திற்கு கூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு முதல் அதிகப்படியான போட்டிகளும் நடைபெறவிருப்பதால் தான் தொகைகளும் அதிகரித்துள்ளன. ஏற்கனவே ஐபிஎல் அணிகளை ஏலம் விட்டதில் ரூ.12,000 கோடி மற்றும் தற்போது ரூ.40,000 கோடி என்றால் இந்தாண்டில் மட்டும் பிசிசிஐ சுமார் ரூ.50,000 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி தனி கெத்துடன் வலம் வரும்.

களமிறங்கும் நிறுவனங்கள்
தற்போது வரை இந்திய கிரிக்கெட், ஸ்டார் இந்தியா, சோனி என 2 நிறுவனங்கள் தான் ஒளிபரப்பு உரிமத்திற்காக போட்டி போடும். ஆனால் இந்த முறை டிஜிட்டலில் இருந்தும் பல நிறுவனங்கள் மோதுகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'வியாகாம்' நிறுவனம் போட்டியிடுகிறது. இதுமட்டுமல்லாமல், அமேசான் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் மோதுவதால், பிசிசிஐ காட்டில் பண மழை என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications