மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் இரண்டு நாட்கள் முடிவில் 10 அணிகளும் இணைந்து 182 வீரர்களை வாங்கியிருக்கிறது. இதில் 62 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார்கள். மொத்தமாக 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட், 27 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆல் ரவுண்டர்கள் அதிக விலைக்கு போகவில்லை என்று தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் குறை கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது இருக்கும் இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டர் என்றால் அது தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்தான்.

தற்போது இருக்கும் டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர்தான் இடம்பெற்று விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். நியூசிலாந்துக்கு எதிராக அஸ்வின், ஜடேஜா கூட பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் வாஷிங்டன் சுந்தர் பிரமாதமாக செயல்பட்டார். அப்படி இருக்கும் போது வாஷிங்டன் சுந்தருக்கு வெறும் 3.20 கோடி ரூபாய் தான் கிடைத்திருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் பவுலர் மட்டுமல்ல டி20 போட்டியிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் பெயரை இரண்டாவது நாளாக கொண்டு வந்து அவருக்கு அநியாயம் செய்து விட்டார்கள். 10 அணிகளிடமுமே பணம் இல்லாத நிலையில் வாஷிங்டன் சுந்தர் பெயர் வந்ததால் அவருக்கு குறைவான பணமே கிடைத்திருக்கிறது.
எனினும் வாஷிங்டன் சுந்தர் தற்போது குஜராத் அணிக்கு சென்று இருப்பதை நான் நல்லதாகவே பார்க்கின்றேன். குஜராத் அணியில் இருக்கும் நெஹ்ராவை போல் தமிழக வீரர்களை யாருமே ஊக்குவித்தது கிடையாது. ரஷித் கானுடன் இணைந்து வாஷிங்டன் சுந்தர் பந்து வீசினால் அது நிச்சயம் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆர் சி பி அணி போல் ஒரு காமெடியான அணி நிர்வாகத்தை நான் பார்த்ததே இல்லை. வாஷிங்டன் சுந்தர் ஆர் சி பி அணிக்காக விளையாடி இருக்கிறார். அவரை ஆர் சி பி அணி எடுத்திருக்க வேண்டும். ஆனால் குருனல் பாண்டியாவுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து தேர்வு செய்து இருக்கிறார்கள். குர்னல் பாண்டியா நல்ல வீரராக இருந்தாலும், வாஷிங்டன் சுந்தர் நல்ல ஆப் ஸ்பின்னை போடுவார். பல அணிகள் இடம் அதிக அளவு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதனால் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசி இருப்பார்.
இதேபோன்று ஆர் சி பி அணி அதிரடி வீரர் வில் ஜாக்சை தேர்வு செய்யாமல் விட்டிருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த அளவுக்கு யாராவது மோசமான முடிவை எடுப்பார்களா என்று எனக்குத் தோன்றியது. ஆர் சி பி செய்த காமெடியை பார்த்து மும்பை அணியின் உரிமையாளரே எழுந்து வந்து கை கொடுத்து விட்டுப் போனார். ஆர் சி பி செய்த ஒரு நல்ல காரியம் புவனேஸ்வர் குமாரை வாங்கி இருப்பது தான். பந்துவீச்சில் ஆர்சிபி அணி தடுமாறி வந்தது. தற்போது புவனேஸ்வர் குமார் வந்திருப்பதன் மூலம் அவர் நான்கு ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசுவார்.