Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச வீரர்களை நாங்கள் வரவேற்கிறோம்.. ஆனால்... ஐபிஎல் தடை குறித்து ஹர்பஜன் சிங் கருத்து

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் இலங்கைக்கோ அல்லது வேறு ஒரு நடுநிலை நாட்டிற்கோ மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வங்கதேச வாரியத்தின் இந்த முடிவு, பிசிசிஐ பிறப்பித்த ஓர் உத்தரவின் விளைவாகவே பார்க்கப்படுகிறது.

அதாவது, IPL அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்துள்ள வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது தான் இம்முடிவுக்குக் காரணம். வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு முறையாகக் கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையில், இந்த முக்கியப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், ஐசிசி போட்டி அட்டவணையை மாற்றியமைக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழல் குறித்து ஹர்பஜன் சிங் தனது கருத்தில், "கடந்த சில நாட்களில் நடந்த பல்வேறு சம்பவங்களால், வங்கதேசம் இந்தியாவிற்கு வர விரும்பவில்லை. வங்கதேசத்தில் நடந்தவை தவறு. இவர்களது கோரிக்கை குறித்து ஐசிசி ஒரு முடிவை எடுக்க வேண்டும். அனைவரையும் இந்தியாவிற்கு வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் (வங்கதேசம்) இங்கு வர விரும்புகிறார்களா இல்லையா என்பது அவர்களது விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

IPL 2026 சீசனுக்காக ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒப்பந்தம் செய்தது. வழக்கமான ஒரு ஏல நிகழ்வாகத் தொடங்கிய இது, தற்போது போட்டிக்கு அப்பால் இருநாட்டுக்கும் இடையிலான மோதலாக மாறியிருக்கிறது.

ஏலம் முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு, இந்தியாவில் சில பொது நபர்களும் குழுக்களும் KKR மற்றும் இணை உரிமையாளர் ஷாருக்கான் எதிராக பிரச்சாரம் தொடங்கின. கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின் வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடந்த வன்முறைச் செய்திகளால் ஏற்பட்ட கோபமே ரஹ்மானை நீக்கக்கோரக் காரணம். ரஹ்மானை விடுவிப்பது, வங்கதேச வீரர்களை ஐபிஎல்-லிருந்து முழுமையாக விலக்குவது என கோரிக்கைகள் தீவிரமடைந்தன.

முதலில் மௌனம் காத்த பிசிசிஐ, ஜனவரி 3 அன்று தலையிட்டது. KKR அணியை ரஹ்மானை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக செயலாளர் தேவாஜித் சக்கியா உறுதி செய்தார். இந்த முடிவுக்கு 'சமீபத்திய நிகழ்வுகள்' காரணம் என அவர் கூறினார். KKR-க்கு ஒரு மாற்று வீரர் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. KKR அணி இந்த உத்தரவுக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்தது.

உடல்நலம் அல்லது ஒழுங்குமுறை காரணங்களைத் தவிர்த்து, ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐபிஎல் வீரர் ஒருவர் சீசனுக்குப் பல மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வுகளையடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. வங்கதேச அரசு, அடுத்த அறிவிப்பு வரும் வரை நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Story first published: Monday, January 5, 2026, 17:34 [IST]
Other articles published on Jan 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+