ஐபிஎல் இடைக்காலத் தலைவராக சிரயு அமீன் நியமனம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலைமையில் மோடியைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மனோகர் பேசுகையில், ஐபிஎல் அமைப்பின் இடைக்கால ஆணையராக சிரயு அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் நிர்வாகத்தைக் கவனிக்க சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அமீனுக்கு உதவி செய்வார்கள் என்றார்.
சிரயு அமீன் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராக இருக்கிறார். பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அமீன் ஆலம்பிக் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2 மணி நேரம் நடந்த ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தின்போது யார் அடுத்த தலைவர் என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது. மனோகரையே அந்தப் பொறுப்பை வகிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை மனோகர் மறுத்து விட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மனோகர் பேசுகையில், ஐபிஎல்லின் பல ஆவணங்கள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து ரத்னாகர் ஷெட்டி விசாரிப்பார்.
மோடி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் அளித்த பதில் திருப்தி தரவில்லை. இதனால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவை நிச்சயம் கைவிடப்படும்.
ஐபிஎல் என்பது மிகப் பெரிய சொத்து. அது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல. சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது தண்டனை அல்ல. நியாயமான விசாரணைக்கு வழியேற்படுத்தும்வகையிலான நடவடிக்கைதான்.
ஐபிஎல்லின் நடவடிக்கைகள் ஒளிவுமறைவில்லாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஜூன் மாதம் மீண்டும் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றார் மனோகர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications