சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி தங்களது சொந்த மண்ணில் ஏழு லீக் ஆட்டங்களிலும் விளையாடி முடித்து விட்டது.
இந்த நிலையில் சென்னை அணிக்கு ஒரு சாபம் இருப்பதாகவும் அதை தெரியாமல் சென்னை அணி அந்த தவறை செய்து விட்டதாகவும் ரசிகர்கள் சிலர் பீதியை கிளப்பி இருக்கிறார்கள். சென்னை அணி தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்து விட்டது.

எனினும் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகாததால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து தொப்பிகளையும் பந்துகளையும் நினைவு பரிசாக அளித்தார்கள். அப்போது கவாஸ்கர் கூட தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராபை பெற்றுக் கொண்டார். இது தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதற்கான பிரியாவிடை நிகழ்ச்சியாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் சென்னை அணி இதுபோன்று பலமுறை லீக் ஆட்டம் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். சரி இதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் சிஎஸ்கே அணிக்கு தெரியாமலே ஒரு சாபம் பின் தொடர்ந்து இருக்கிறது. காரணம் 2008 ஆம் ஆண்டு லீக் ஆட்டம் முடிவில் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றி வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இதேபோல் சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தின் போது மைதானத்தை சுற்றி வந்தார்கள். அப்போது அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாட சிஎஸ்கேவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்று 2019 ஆம் ஆண்டும் சிஎஸ்கே வீரர்கள் ரசிகர்களுக்கு தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் பிரியா விடை அளித்தார்கள். இதன்பிறகு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் சென்னையில் போட்டி நடைபெறாத நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் அதே தவறை சிஎஸ்கே செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.