சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு போதிய டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னையில் இதுவரை இரண்டு ஐபிஎல் லீக ஆட்டம் நடைபெற்றது. ஒன்றில் லக்னோ அணியுடனும் இரண்டாவது ராஜஸ்தான் அணியுடனும் சிஎஸ்கே மோதியது. இந்த இரண்டு போட்டிகளுக்கும் வெறும் ஐ,ஜே, கே என்ற கேலரிகளை மட்டுமே பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மற்ற டிக்கெட்டுகளை ஸ்பான்சர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்றதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தோனியை பார்க்க வேண்டும் என நினைத்த ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. மேலும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டின் அதிகபட்ச தொகையை 2000 ரூபாய் ஆகும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆடுகளத்திற்கு நேராக உள்ள கேலரிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் கடும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்ப்புக்கு பணிந்த சிஎஸ்கே நிர்வாகம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெறும் போட்டிகளுக்கு கூடுதல் டிக்கெட்டை வழங்கியுள்ளது. இதன்படி ஆரம்ப விலை 1500 ரூபாயாகவும், அதிகபட்ச விலை 5000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் வரும் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் 1500 ரூபாய் டிக்கெட் கவுண்டரில் மட்டும் கிடைக்கும். இதேபோன்று 2000 மற்றும் 2500 ரூபாய் டிக்கெட்டுகள் கவுண்டர் மற்றும் ஆன்லைனிலும் வழங்கப்படும். இதேபோன்று மூவாயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் 18ஆம் தேதி வெறும் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில் 5000 ரூபாய் டிக்கெட் ஆடுகளத்திற்கு நேராக அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கும். முந்தைய போட்டிகளுக்கு வெறும் ஐ ஜே கே கேலரிகள் மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக சி, டி, இ மற்றும் கலைஞர் கருணாநிதி பெவிலியன் ஆகியவற்றுக்கான டிக்கெட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.இது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இனி கூடுதல் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டியை காண முடியும்.