சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டமிழந்தது குறித்த சர்ச்சை பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது கருத்தை ஆணித்தரமாக கூறி இருக்கிறார். "தோனி நிச்சயமாக ஏமாற்ற மாட்டார், அம்பயர் மீதுதான் தவறு. ஆனால் அதை ஒரு சாக்காக சொல்லக்கூடாது" என அவர் சிஎஸ்கே அணியை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. தோனி ஒன்பதாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார். அவர் நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு ரன் எடுத்து சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு அம்பயர் அவுட் கொடுத்த போது தோனி பேட்டை உயர்த்தி காட்டி தான் அவுட்டில்லை, இது இன்சைட் எட்ஜ் என சுட்டிக்காட்டினார். ஆனாலும், கள நடுவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அடுத்து மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ கேட்டார் தோனி. பந்து பேட்டில் படுவது போல தெரிந்தாலும் சிறிய இடைவெளி இருந்தது. அல்ட்ரா எட்ஜில் அதிர்வுகள் இருந்தன.
அதை வைத்து இது அவுட் இல்லை என அம்பயர் அறிவித்திருக்கலாம். ஆனால், அம்பயர் வீடியோவில் பந்துக்கும் பேட்டுக்கும் இடைவெளி இருக்கிறது என கூறி அவுட் என அறிவித்தார். இதை அடுத்து பலரும் அம்பயரை விமர்சித்து வருகின்றனர். இது பற்றி பேசிய நவ்ஜோத் சிங் சித்து, "சிஎஸ்கே அணி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தோனி அவுட்டை வைத்து சாக்குபோக்கு சொல்ல கூடாது" என சொல்லி இருக்கிறார்.
இது பற்றி சித்து பேசுகையில், "தோனி ஏமாற்ற மாட்டார். அவர் பேட்டை உயர்த்தி அம்பயரிடம் இன்சைட் எட்ஜ் ஆனதாக சொன்னார். தோனி இதுபோலவெல்லாம் எப்போதும் செய்ய மாட்டார். அவர் நிச்சயம் அவுட் இல்லை என்று நான் உறுதியாக சொல்வேன்."
"ஆனால் எந்த ஒரு மனிதனும் தவறு செய்வான். மூன்றாவது அம்பயரும் ஒரு மனிதர் தான். ஆனால், இதை ஒரு பெரிய சர்ச்சையாக மாற்றக்கூடாது. இதை நாம் கடந்து செல்ல வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்களும் அணிக்கு ரன் சேர்க்க வேண்டும். சிஎஸ்கே அணி தோனி ஆட்டமிழப்பதற்கு முன்பே மோசமான நிலைக்கு சென்று விட்டது."
"இப்போது அந்த அணி வரலாற்றிலேயே முதன்முறையாக 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறது. தோனி ஆட்டமிழந்ததை எல்லாம் ஒரு சாக்காக இப்போது சொல்ல கூடாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர்களே அழித்துக் கொண்டார்கள்" என்று சரமாரியாக விளாசினார் நவ்ஜோத் சிங் சித்து.