சென்னை : ஐபிஎல் தொடரில் 1426 நாட்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் இன்று விளையாடுகிறது. லக்னோவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நடுவர் பந்துவீச அனுமதி அளித்தும், போட்டி தொடங்கப்படவில்லை.
என்ன ஆச்சு என்று பார்த்தால், மைதானத்திற்குள் ஒரு நாய் புகுந்தது. ஆடுகளத்தில் அது இங்கேயும், அங்கேயும் ஓடி விளையாடியது. இதனை பிடிக்க முடியாமல் மைதான ஊழியர்கள் கடுமையாக போராடினர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் நாயை பிடிக்க முடியாமல், மைதான ஊழியர்கள் திணற தொடங்கிவிட்டனர். இதனால் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிரிக்க தொடங்கிவிட்டனர். இதனையடுத்து வீரர்களும் இதனை எஞ்சாய் செய்து பார்த்தார்கள்.
எனினும் இந்த சம்பவத்தை பார்த்து சுனில் கவாஸ்கர் கடுப்பாகி விட்டார். இது குறித்து நேரலையில் பேசிய அவர், கிரிக்கெட்டில் நேரம் என்பது மிகவும் முக்கியம். இது போன்ற நாய் தொல்லையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதை எல்லாம் ஏற்று கொள்ளவே முடியாது.
இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தில் யார் இதற்கு பொறுப்பு. இத்தனை பாதுகாப்பையும் மீறி நாய் எப்படி உள்ளே நுழைந்தது என்று கவாஸ்கர் கடுமையாக திட்டினார். ஏற்கனவே, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியின் போது சென்னை சேப்பாக்கத்தில் நாயால் போட்டி தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.