ஐபிஎல் அட்டவணை மாற்றப்பட வாய்ப்பு.. போட்டிகள் எண்ணிக்கை உயர்வு? பிசிசிஐ விளக்கம்
மும்பை: ஐபிஎல் தொடரின் அட்டவணையை மாற்றியமைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. வெயில் மற்றும் மழையின் தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில், அடுத்த சீசனில் போட்டிகள் மார்ச் நடுப்பகுதியில் தொடங்கி மே நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 அன்று நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஒரு ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கோடைக்கால வெப்பநிலை உயர்வு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரை 74ல் இருந்து 94 போட்டிகளாக விரிவுபடுத்துவது தொடர்பான சமீபத்திய செய்திகளுக்கு பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா விளக்கமளித்துள்ளார். தற்போது இந்த யோசனை தீவிர பரிசீலனையில் இல்லை என்றும், உடனடியாக அத்தகைய திட்டம் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய சைகியா, ஐபிஎல் போட்டிகள் 94 ஆக விரிவுபடுத்தப்படும் என்ற யோசனையை இல்லை. "நாங்கள் (பிசிசிஐ) அந்த விஷயத்தைக் குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை, ஏனெனில் முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ஐபிஎல் இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இந்த ஆண்டு இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் நீடித்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
போட்டிகளின் எண்ணிக்கையைவிடவும், வானிலை நிலவரங்களே தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக இருப்பதாக சைகியா சுட்டிக்காட்டினார். "கடந்த ஆண்டு, ஒரு வார இடைநிறுத்தம் காரணமாகத் தொடர் நீட்டிக்கப்பட்டது. மே 31 வரை தொடர் நடந்தது. சில இடங்களில் மழை அல்லது அதிக வெப்பம் இருந்தன என்பதுதான் எங்கள் கவலை," என்று அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் அட்டவணையை முன்கூட்டியே கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பிசிசிஐ ஆராய்ந்து வருவதாக சைகியா உறுதிப்படுத்தினார். இதன் மூலம், மே மாத நடுப்பகுதிக்குள் தொடரை முடித்து, கடும் வெயில் மற்றும் பருவமழைக்கு முந்தைய நிலைமைகளைத் தவிர்க்க முடியும்.
"ஐபிஎல் தொடரை 15 நாட்கள் முன்னதாகத் தொடங்குவதற்கான வழிகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார். "இந்த ஆண்டு மார்ச் 28 அன்று தொடங்கினோம். மார்ச் 15-ஆம் தேதிக்குள் தொடங்கி மே 15-க்குள்ளேயே முடிப்பதற்கு முயற்சிப்போம்," என்றார்.
"இதன்மூலம், வெயிலின் கடுமையோ அல்லது மழையோ வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை பாதிக்காது. வெப்பமான வெயிலில் போட்டியைப் பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் சிரமமானது என்பதால் இது மிக முக்கியம்," என அவர் விளக்கினார்.
ஐபிஎல் தொடர் எதிர்காலத்தில் விரிவாக்கப்படாது என்று திட்டவட்டமாக மறுக்கவில்லை என்றாலும், அத்தகைய எந்த நகர்வும் சர்வதேச கிரிக்கெட் காலண்டர் மற்றும் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் (FTP) பொறுத்தது என்று சைகியா கூறினார்.
"நாங்கள் இதில் வேலை செய்கிறோம், ஆனால் 74ல் இருந்து 94 ஆக அதிகரிப்பதை தீவிரமாக பரிசீலிப்பதாக உடனடியாகக் கூற முடியாது. இதில் பல காரணிகள் உள்ளன," என்று சைகியா குறிப்பிட்டார்.
"பல்வேறு FTPகள், ஐசிசி நிர்வாகத்தின் கீழ் உள்ள இருதரப்பு மற்றும் பலதரப்புப் போட்டிகளில் மற்ற நாடுகளின் பங்களிப்பு ஆகியவற்றை நாங்கள் ஆராய வேண்டும். எனவே, இப்போதைக்கு போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து உடனடி பேச்சுவார்த்தை இல்லை," என்றார்.எதிர்கால விரிவாக்கம் குறித்து, "ஆனால் 2027க்குப் பிறகு விஷயங்கள் எப்படி முன்னேறுகின்றன என்று பார்ப்போம். காலம் மட்டுமே சொல்லும்," என அவர் தனது கருத்தை முடித்தார்.


Click it and Unblock the Notifications

