அபுதாபி: இன்னும் சில மணி நேரங்களில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களின் கவனமும் இந்த மினி ஏலத்தின் மீதுதான் உள்ளது. இப்படி இருக்கும்போது இந்த மினி ஏலத்தில் அனைவரையும் கொஞ்சம் சர்ப்ரைஸில் ஆழ்த்தியுள்ள அணி என்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். காரணம் கையில் வெறும் ரூபாய் 2.75 கோடிகளை வைத்துக் கொண்டு ஏலத்தை எதிர்கொள்ள உள்ளது என்பதுதான்.
இந்த பணம் இந்தியாவில் இருந்து மும்பை அணி நிர்வாகக் குழு அபுதாபிக்கு சென்று வருவதற்கான செலவைக் காட்டிலும் கூட குறைவானதாக இருக்கலாம். ஆனாலும் ரசிகர்களுக்கு மும்பை அணியின் மீதான கவனம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஐபிஎல் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான் ஐபிஎல் தொடரின் கதாநாயகர்கள். சென்னை அணி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், சென்னை அணிக்கே வில்லன் இன்னும் சொல்லப் போனால் வில்லாதி வில்லன் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான்.
"பேட்டைக்காரன் சேவல் பேட்டைக்காரன் சேவல் தான்யா" என்று ஆடுகளம் படத்தில் வரும் வசனத்தைப் போல இந்த இரு அணிகளின் வீரர்கள் தேர்வு முறையும், அவர்களை ஆளாக்கும் விதமும் மற்ற அணிகளை காட்டிலும் வித்தியாசமானது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப் அணியில் தவறுதலாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஷாஷாங் சிங். ஏலம் முடியும் தருவாயில், நாங்கள் தவறான வீரரை ஏலம் எடுத்து விட்டோம் என்று முறையிட்ட சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றது.

ஸ்பெஷலிஸ்ட்: ஆனால் இந்த மும்பை மற்றும் சென்னை அணிகளிடம் அப்படியான எந்த தவறும் இல்லாமல், வீரர்களை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடிப்பிடித்து ஐபிஎல்லுக்கு அழைத்து வந்து அவர்களை ஸ்டார் பிளேயர்களாக மாற்றுவார்கள். ஏலத்தின் போதுமே கூட இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி என்பது சுவாரஸ்யத்தைக் கொடுக்கும். ரோகித் சர்மாவுக்காக இரு அணிகளும் போட்டி போட்டதை, யராலும் மறக்க முடியாது.
தேவையான வீரர்கள்: இப்படினா மும்பை அணி இந்த மினி ஏலத்தில் மொத்தம் 5 வீரர்களை எடுக்க வேண்டும், அதில் 4 வீரர்கள் இந்திய வீரர்களாகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்க வேண்டும். ஆனால் கையில் இருப்பது வெறும் ரூபாய் 2 கோடியே 27 லட்சங்கள்தான். இதை வைத்துக் கொண்டு மற்ற அணிகளுடன் போட்டி போடவே முடியாது என்பது நிதர்சனம். அப்படி இருக்கும்போது, இந்த மினி ஏலத்தில் மிக்ஷர் சாப்பிட போகிறார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆர்வம்: அதே நேரத்தில் பல்தான்ஸை நம்ப முடியாது. பல அணிகளும் கவனிக்காத பல வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஸ்டார்களாக, மேட்ச் வின்னர்களாக, சீரீஸ் வின்னர்களாக மாற்றிய வரலாறு மும்பை அணிக்கு உள்ளது. உதாரணத்திற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா சகோதரர்களை குறிப்பிடலாம். ஏற்கனவே மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள், இந்த ஏலத்தில் கடமைக்கு 5 வீரர்களை பொறுக்கிப் போட்டால் போதும் என மும்பை மாதிரியான ஒரு அணி நினைக்கவும் வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது இந்த மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி யாரை எல்லாம் வாங்கப் போகிறார்கள் என்பதும் பலரது ஆவலைத் தூண்டியுள்ளது.