அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டதால் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுக்க சாகா அரை சதம் அடித்தார். இதன் மூலம் குஜராத் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி மூன்று பந்துகள் பிடித்த நிலையில் மழை குறிக்கிட்டது. இந்த நிலையில் மழை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை மேகங்கள் திடீரென்று வலுப்பெற்று மைதானத்திற்கு முன் மையம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அரை மணி நேரம் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கினால் நிச்சயமாக ஓவர்கள் குறைக்கப்படும். அப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டால் டி எல் எஸ் விதிப்படி வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் ஐந்து ஓவர்கள் முடிவடைந்த நிலையில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இருந்தால் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதுவே ஒரு விக்கெட் இழந்தால் 49 ரன்கள் ஆகவும், இரண்டு விக்கெட் இழந்தால் 56 ரன்கள் ஆகவும், மூன்று விக்கெட்டுகள் இழந்தால் 65 ரன்கள் ஆகவும் வெற்றி இலக்கு இருக்கும். இதுவே 10 ஓவர் முடிவின்படி சிஎஸ்கே அணி 91 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதேபோன்று ஒரு விக்கெட் இழந்தால் 94 ரன்களும், இரண்டு விக்கெட் இழந்தால் 98 ரன்களும், மூன்று விக்கெட் இழந்தால் 102 ரன்கள் என்று வெற்றி இலக்கு மாற்றப்படும்.
இதேபோன்று 12 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 112 ரன்களும், ஒரு விக்கெட் இழந்திருந்தால் 114 ரன்கள் வெற்றி இலக்காவும், இரண்டு விக்கெட் இழந்திருந்தால் 117 ரன்கள் வெற்றி இலக்காவும், மூன்று விக்கெட் இழந்தால் 120 ரன்கள் வெற்று இலக்காகும் மாற்றி அமைக்கப்படும். இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது சிஎஸ்கே அணிக்கு தற்போது சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆடுகளத்தில் பந்தும் சரியாக வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.