சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மாபெரும் ஐபிஎல் சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 114 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடுத்து துவம்சம் செய்தது. 10.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ராப்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த ஐபிஎல் கோப்பை வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமான கேப்டன்சி சாதனையை செய்துள்ளார். இதுவரை ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் ஐந்தாவது இந்திய கேப்டனாக இடம் பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். முன்னதாக தோனி, ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய நால்வர் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் ஆவர்.
அந்த வரிசையில் ஐந்தாவதாக இடம் பெற்றுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். தோனி, ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது இடம் பெற்று சரித்திரம் படைத்தது இருக்கிறார். இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஜொலித்திருக்கிறார். இதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.