ஐபிஎல் 2020: இறுதிப்போட்டி தள்ளிவைக்கப்பட வாய்ப்பு... நிர்வாகக்குழு கூட்டத்தில் விவாதம்
மும்பை : ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 8ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10ம் தேதி நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தீபாவளியை ஒட்டி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஒளிப்பரப்பாளர்கள் கோரியிருந்த நிலையில், மேலும் 2 தினங்கள் கழித்து இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்னும் 3 தினங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூஏஇயில் நடைபெறுகிறது
ஐபிஎல் 2020 போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை யூஏஇயில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து யூஏஇயும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிரெட்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்டார் இந்தியா கோரிக்கை
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26ம் தேதி துவங்கவிருந்த நிலையில் அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி தேதிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ஒளிப்பரப்பு நிறுவனமான ஸ்டார் இந்தியா கோரிக்கை விடுத்தது. அப்போதுதான் அதிகமான விளம்பரங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றம்
இந்நிலையில், ஸ்டார் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த ஐபிஎல் அட்டவணையில் மேலும் திருத்தம் மேற்கொள்ள ஐபிஎல் நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியை நவம்பர் 8ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்னும் 3 நாட்களில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பு
இந்த மாற்றம் செய்யப்படும் நிலையில், யூஏஇயில் இறுதிப்போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்பவிருந்த இந்திய அணியினர் நேராக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அங்கு டிசம்பர் 3ம் தேதி துவங்கவுள்ள தொடரில் பங்கேற்கும் வகையில் அவர்கள் குவாரன்டைன், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டி
இந்த மாற்றத்தின்மூலம் 51 நாட்கள் நடத்தப்பட இருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது 54 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆனால் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இறுதிப்போட்டி இதன்மூலம் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தீபாவளி நேரம் என்பதால் இந்த மாற்றம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications