IPL Final: ஐஸ் கட்டிகளை கொட்டிட்டாங்க.. 2 கோப்பை வென்று கொடுத்த ஆண்டி பிளவருக்கு ஆர்சிபி சர்ப்ரைஸ்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, ஆர்சிபி வீரர்கள் தங்களது தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மீது ஐஸ் கட்டிகளைக் கொட்டி 'ஐஸ் பாத்' கொடுத்து கொண்டாடினர்.
திடீர் 'ஐஸ் பாத்' கொண்டாட்டம்
போட்டி முடிந்து ஆர்சிபி வீரர்கள் மைதானத்திலும் டிரெஸ்ஸிங் ரூமிலும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்சிபி வீரர்கள் சிலர் ஒன்றிணைந்து, குளிர்பானங்கள் வைக்க பயன்படும் பெரிய ஐஸ் பெட்டியில் இருந்த ஐஸ் கட்டிகளை தங்களது தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மீது கொட்டினர்.

இதை எதிர்பார்க்காத ஆண்டி பிளவர், வீரர்களின் இந்தத் திடீர் 'ஐஸ் பாத்' கொண்டாட்டத்தால் திகைத்தாலும், பின்னர் அவர்களோடு இணைந்து வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடினார். மைதானத்தில் இருந்த கேமராக்களில் பதிவான இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
ஆண்டி பிளவரின் வெற்றிப்பாதை
ஆர்சிபி அணியின் இந்த இமாலய வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர் ஆண்டி பிளவரின் கடுமையான உழைப்பும் திட்டமிடலும் ஒளிந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றின் முதல் 17 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி, கடந்த 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க ஆண்டி பிளவரின் வருகையே முக்கியக் காரணம்.
2024-ல் தொடங்கிய புதிய சகாப்தம்
கடந்த 2024-ம் ஆண்டு ஆர்சிபி அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆண்டி பிளவர், அணியில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவந்தார். பல ஆண்டுகளாக இருந்த 'சோக்கர்ஸ்' என்ற முத்திரையை உடைத்து, அணிக்குத் தேவையான நம்பிக்கையையும் ஆக்ரோஷத்தையும் ஊட்டினார். அவரது வழிகாட்டுதலின்படி, 2024 ஐபிஎல் தொடரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி அணி. அதன்பின் 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
2026-லும் தொடர்ந்த ஆதிக்கம்
இந்த 2026 சீசனிலும் ஆர்சிபி அணி லீக் சுற்றில் இருந்தே அசுர பலத்துடன் ஆடி வந்தது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் குஜராத் அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை விராட் கோலியின் 75 ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 18 ஓவர்களில் ஆர்சிபி எட்டிப்பிடித்தது. கேப்டன் ரஜத் படிதார் மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஜோடி, அணியை இறுதிவரை மிகச் சிறந்த முறையில் வழிநடத்திச் சென்றுள்ளது.
எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, அடுத்தடுத்த ஆண்டுகளில் கேப்டனாகக் கோப்பை வென்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றுள்ளார். அதற்குப் பின்னால் இருந்த முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஆண்டி பிளவருக்கு ஆர்சிபி வீரர்கள் அளித்த 'ஐஸ் பாத்' மரியாதை, அவரது உழைப்புக்குக் கிடைத்த மிகச்சிறந்த பரிசாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
